Monday, September 24, 2007

14வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள் - 3

அரங்காடல் - 14 (2007)
- குரு அரவிந்தன் (கனடா) -

கிரேக்க நாட்டில்தான் முதன்முதலாக நாடகக்கலை வளர்ந்ததாகப் பழைய இலக்கியங்களில் இருந்தும், வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரைகளில் இருந்தும் தெரியவருகிறது. கூத்து, நாடகம், நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளை மக்கள் கண்டு களிக்கும் பொதுவிடத்தை முன்னாளில் அம்பலம் என்று அழைப்பர். அதுவே பின்னாளில் அரங்கமாயிற்று. அந்த அரங்கத்தில் ஆடுவதால், இந்த நிகழ்ச்சிக்கு அரங்காடல் என்ற பெயரை மனவெளி கலையாற்றுக் குழுவினர் சூடியிருக்கலாம். வருடாவருடம் நடக்கும் வித்தியாசமான இந்த அரங்காடல் நிகழ்ச்சியை பதினான்காவது தடவையாக மனவெளி கலையாற்றுக் குழுவினர், நாடகரசிகர்களுக்காக அரங்கேற்றிக்காட்டினர்.

யூலை மாதம் எட்டாம் திகதி 2007, ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒருமணிக்கும், மாலை ஆறுமணிக்குமாக இரண்டு காட்சிகள் மார்க்கம் தியேட்டர் அரங்கில் நடைபெற்றன. அருமையான இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்ட நாடகரசிகர்கள், தவறவிட்டதற்காக நிச்சயமாக பின்பு வருத்தப்பட்டிருப்பார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.

எங்கவூரிலே வி.வி.வைரமுத்துவின் காத்தவராயன் கூத்தை, குறிப்பாக மயானகாண்டத்தை சின்னவயதிலே விடியவிடியப் பார்த்து ரசித்திருக்கிறேன். அதன்பின் பள்ளிப்பருவத்தில் காங்கேயன்துறை நடேஸ்வராக்கல்லூரியில் கலையரசு ஏ.ரி.பொன்னுத்துரை, தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் கதிரேசம்பிள்ளைமாஸ்டர் ஆகியோரின் நாடகங்களை கண்டு வியந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் மேடையில் தோன்றி நடித்தவர்களைப் பாராட்டத் தோன்றியதே தவிர அவர்களது வெற்றிக்குப் பின்னால் ஒருகூட்டமே இயங்கிக் கொண்டிருந்ததையோ, திரைமறைவில் நின்று, நாடகத்தின் வெற்றிக்குப் பாடுபட்ட அவர்களையும் பாராட்டவேண்டும் என்றோ நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை.

தாசீசியஸ்சின் நாடகங்கள் வெளிவந்தபோதுதான் கதை, நெறியாள்கை, அரங்கஅமைப்பு, குறிப்பாக ஒலி, ஒளி அமைப்பு, நடிகர்களின் தேர்வு, பொருளாதார வசதி போன்ற பல காரணிகள் ஒரு நாடகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாய் அமைகின்றன என்பதை உணரமுடிந்தது. மிகக்குறைந்த வசதிகளோடு நடேஸ்வராக்கல்லூரி மைதானத்தில் அன்று பார்த்த மயானகாண்டத்தையும், நவீனவசதிகளோடு கூடிய, குளிரூட்டிய சொகுசு இருக்கைகள் உள்ள மார்க்கம் தியேட்டரில் நடந்த அரங்காடலையும் என் மனம் ஏனோ அந்தநிமிடம் ஒப்பிட்டுப்பார்த்தது.

காலத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு துறைகளிலும் ஏற்பட்ட நவீன, தொழில்நுட்ப மாற்றங்களும், நாடகத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாய் அமைந்தன என்பதை என்னால் அப்போது புரிந்து கொள்ளமுடிந்தது. யாரும் யாருக்கும், எந்தவிதத்திலும் சோடை போகவில்லை என்பதையும் என்னால் உணரமுடிந்தது. நாங்கள் புகலிடம்தேடி வந்தபோது, எம்மவர்களால் அரும்பாடுபட்டு வளர்த்த இந்த நாடகக்கலை மெல்ல அழிந்து விடுமோ என்ற பயம் எல்லோர் மனதிலும் இருந்ததென்னவோ உண்மைதான்.

ஆனால் இந்த நாடகக்கலை, இந்த மண்ணில் ஒருபோதும் அழியாது என்பதை அரங்காடல் நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்கள் நிச்சயமாகப் தெட்டத்தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். காவியம் செய்வோம், ஓவியம் செய்வோம், நல்ல கலை வளர்ப்போம் என்றெல்லாம் புதுமைக்கவி பாரதி கண்டகனவுகள் இந்த மண்ணில், இளைய தலைமுறையினரால் நினைவாக்கப் படுவதைப்பார்க்கும் போது, புகலிடம் தேடிவந்த தமிழர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

நாங்கள் மார்க்கம் தியேட்டருக்குச் சென்றபோது, அரங்கவாசலில் நடிகர் கதிர் துரைசிங்கம் சிரித்த முகத்தோடு; நின்று, எல்லோரையும் அன்போடு வரவேற்றார். நிகழ்ச்சி ஆரம்பமானதும், எழுத்தாளரும், சமூகசேவகருமான க.நவம் மேடையில் தோன்றி சிறந்தமுறையில் நிகழ்ச்சிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வைத்தார். அவரது அமைதியான, கணீரென்ற குரல் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தது மட்டுமல்ல, ஆரம்பத்திலேயே எல்லோரையும் தனது பேச்சு வன்மையால் கட்டிப்போட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

இப்பொழுதும் எப்பொழுதும்: என்ற குறியீட்டு நாடகம் முதலில் அரங்கேறியது. குறியீடுகளின் பலம், பலவீனம் இரண்டுமே அவற்றை நோக்குபவர்கள், தத்தமது பட்டறிவுக்கும் அறிதலுக்கும் ஏற்ப, அவற்றை வௌ;வேறு விதமாக புரிந்து கொள்வதுதான் என்ற விளக்கத்தோடு பார்வையாளர்களின் முடிவிற்கே விடப்பட்டது. ஹரல்ட் பின்றரின் மூலக்கதை பிரதியாக்கம் செய்யப்பட்டு, துஷி ஞானப்பிரகாசகத்தின் நெறியாள்கையில், நீரா சிற்சபைஈசனின் உதவியோடு இந்த நாடகம் அரங்காடலில் மேடையேற்றப்பட்டது. முல்லையூர் கே.பாஸ்கரன், கீர்த்தனன் திவ்வியராஜன், கஜஜெபன் பரராசசேகரம் ஆகியோரின் உதவியோடு சிறப்பாக இசையமைத்திருந்தார். சிவம் இந்த நிகழ்ச்சிக்கு ஒளி அமைப்புச் செய்திருந்தார். கிங்ஸ்லி செபஸ்ரியாம்பிள்ளை, சேகர் தம்பிராஜா, துவாரகா முனீஸ்வரராஜா ஆகியோர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். வளர்ந்துவரும் நடனதாரகை துவாரகாவின் நடனநிகழ்ச்சியைப் பலதடவைகள் பார்த்து ரசித்திருக்கிறேன். நடிப்புத்துறையிலும் அவருக்குச் சிறந்த எதிர்காலம் காத்திருப்பது, அவரது அன்றைய நடிப்பில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

நிறங்களின் நிஜங்கள்: - பச்சை என்றால் சம்மதம், சிகப்பென்றால் கிட்ட நெருங்காதே, மஞ்சள் என்றால் புனிதம், வெள்ளை என்றால் துக்கம், சமாதானம் கறுப்பென்றால் எதிர்ப்பு இப்படித்தான் நாங்கள் இதுவரை நிறங்களைப் பற்றி நினைத்திருந்தோம். நிறங்கள் வெறும் நிறங்கள் மட்டுமல்ல, அவை அர்த்தம் நிறைந்தவையும்கூட என்று அரங்காடல் மேடையில் மங்கியதோர் விளக்கினிலே, ரெட்ணம் சசிதரனின் இசைத்தேர்வில் அன்று நிரூபித்துக் காட்டினார் ஆனந்தி சசிதரன். ஆடைத்தேர்வும் ஒளியமைப்பும் நிறையவே ரசிகர்களைக் கவர்திழுத்தன. சீனநடனம் போன்ற பல்வேறு கலாச்சார விழுமியங்களில் இருந்தும் சிலவற்றைத் தெரிந்தெடுத்து நடனமாக்கியிருந்தார்கள். இந்த நடனத்தில் தர்ஷினி சிவதாசன், எலிசபெத் இலக்குமணநாதன், பிரான்சினி இலக்குமணநாதன், சௌமியா தயாளன், கஜேந்தினி ஆதவன், அனுசியா சயந்தன், தீபிகா ஸ்ரீதரன், மிதுனா நாகநாதன், சோபிகா நாகேஸ்வரன், ஜானுகா ஸ்ரீதரன், நிவேக்கா ஸ்ரீதரன், கௌரி நகுலேந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். ஒளியமைப்பை சிவம் பொறுப்பேற்றிருந்தார். எலிசபெத் இலக்குமணநாதன், பிரான்சினி இலக்குமணநாதன் இருவரும் கே. எஸ். பாலச்சந்திரனின், பாரதியாரின் கயிறு என்ற நாட்டிய நாடகத்திலும் மிகவும் சிறப்பாகச் செய்திருந்ததை அப்போது என்னால் நினைவுகூரமுடிந்தது.

சாகாத சரித்திரங்கள்: - தாயகக் கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகளைத் தொகுப்பாக்கி அரங்காடல் மேடையிலே, கவிநாயகர் வி. கந்தவனம், வயிரமுத்து திவ்வியராஜன், கணபதி ரவீந்திரன், ராஜ்மீரா இராசையா, கந்தையா ராஜன் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் ஒன்று சேர்ந்து அந்தக் கவிதையை, மேடையில் வரையாத ஓவியமாக்கியிருந்தார்கள். உலகிலே நடக்கும் அடக்குமுறைகள், அட்டூழியங்கள், கொலைகள் போன்ற அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தாயகக் கவிஞர் சி. சிவசேகரத்தின் சிலகவிதைவரிகள் சித்திரமாக்கப்பட்டு, கவிநாயகர். வி. கந்தவனத்தின் நெறியாள்கையில், சிவத்தின் ஒளியமைப்போடு மேடையேற்றப்பட்ட இந்தப் புதுமையான முயற்சியைக் கட்டாயம் பாராட்டவேண்டும். இசைக்கு முல்லையூர் கே. பாஸ்கரனும், வைரமுத்து திவ்வியராஜனும் பொறுப்பாக இருந்தனர். சிவம் ஒளி அமைப்புச் செய்திருந்தார்.


இரண்டுக்கும் நடுவே : மலரப்போகும் மெட்டுக்களுக்காய் இதழ்கள் இரையாகலாம், இதழ்கள் உயிர் தாங்குவதற்கு மலரும் மொட்டுக்கள் இரையானால்..? என்ற கேள்வியோடு நாடகம் தொடங்குகிறது. சிவமணியால் பிரதியாக்கம் செய்யப்பட்ட கருப்பொருளை, மிகவும் கவனமாக, எந்த ஒரு தொய்வும் இல்லாமல் இளையபாரதி நெறியாள்கை செய்திருக்கின்றார். இந்த நாடகத்தில் சாந்தா சோமஸ்கந்தர், சுமுதினி சக்திவடிவேல், ரெட்ணம் சசிதரன், வேணுஷா கலாதரன், சுஜீபன் கலாநாதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். எல்லா நடிகர்களும் தமது பாத்திரங்களை உணர்ந்து நன்றாகவே நடித்தார்கள். குறிப்பாக அப்பம்மாவாக நடித்த, அவ்வப்போது எனக்கருகே இருந்த சில பார்வையாளர்களைக் கண் கலங்கவைத்த சாந்தாக்காவும், மிகவும்திறமையாக நெறியாள்கை செய்த இளையபாரதியும் பாராட்டப்பட வேண்டியவர்கள். முல்லையூர் கே. பாஸ்கரன் இசை அமைக்க, துமிந்தன் சிவா ஒளி அமைப்புச் செய்திருந்தார்.

ஆரி ஓம் நம : புராந்தகனின் நாடகம் என்றாலே பொதுவாக அதற்கு ஒரு தனித்துவம் இருக்கும். இயூஜின் அயனஸ்கோவின் மூலக்கதையை, பென்னேஸ்வரனின் தழுவலில் புராந்தகன் நெறியாள்கை செய்து, மேடையேற்றியிருந்தார். நினைவூட்டுகை அனுஜா ஜெயந்தன், இசை வயிரமுத்து திவ்வியராஜன், முகர்சிங் ச.சுரேந்தர். அரங்கில், குரும்பசிட்டி இ.இராசரத்தினம், விமலேஸ்வரி விஸ்வலிங்கம், ஷாளினி சண்முகநாதன் ஆகியோர் இந்த நாடகத்தில் நடித்திருந்தனர். நடிப்பதற்கென்றே பிறந்தவர் இராசரத்தினம், எனவே அவரது நடிப்பைப் பற்றிச் சொல்லித் தெரியவேண்டுமென்பதில்லை. அடுத்து தனது நடிப்பால் மேடையில் எல்லோரையும் கவர்ந்தவர் சாளினி சண்முகநாதன். அவரது நடிப்புத் திறமையை முதன்முதலாக அரங்காடல் மேடையில் பாக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அலட்டிக் கொள்ளாத பக்குவமான நடிப்பு. நடிப்புத்துறையில் நல்லதொரு எதிர்காலம் அவருக்குகாகக் காத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. வாழ்த்துக்கள்.

நாடக ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்த மனவெளி கலையாற்றுக்குழுவின் இந்த அரங்காடல் முயற்சிக்கும், அவர்களுக்குப் பக்கப்பலமாக நின்று, எல்லா வகையிலும் பாடுபட்டவர்களுக்கும் கனடிய நாடக ரசிகர்களின் சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுக்கள். சிகரத்தை நோக்கிச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையோடு, மனம்தளராது உங்கள் முயற்சிகள் மேலும் தொடர, எங்கள் வாழ்த்துக்கள்!

kuruaravinthan@hotmail.com

(நன்றி - பதிவுகள்)

Saturday, September 22, 2007

14வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள் - 2

கனடாவில் ரொரன்ரொவில் மார்க்கம் அரங்கில் 2007 ஜுலை மாதம் 8ந்திகதி (1மணி, 6மணி) இரு காட்சிகளாக நடைபெற்ற 14வது அரங்காடல் பற்றிய ஒரு பார்வையாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது.


மனவெளியின் 14வது அரங்காடல்
(கே. எஸ். பாலச்சந்திரன்
)

எல்லைகள் கடந்த தேடலும், அதன் அளிக்கையும், பார்வையாளர்கள்; அதை எதிர்கொள்ளும்; பக்குவம் பெறவைப்பதுமான ஒரு ஆரோக்கியமான நாடகச்சூழலை உருவாக்கும் முனைப்புடன் கனடாவில் ரொரன்ரொவில் 1996ல் ஆர்வமுள்ள இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட மனவெளி கலையாற்றுக்குழு கடந்த ஒரு தசாப்தகாலத்தில் பல பிறமொழி நாடகாசிரியர்களையும், நமது படைப்பாளிகளையும் அரங்குக்கு கொண்டு வந்ததோடு, திறமையுள்ள கலைஞர்களை இனம் கண்டு அவர்தம் ஆற்றலை வெளிக்கொணர்ந்ததோடு, உற்சாகமளிக்கும் பரந்துபட்ட பார்வையாளர்களையும் சம்பாதித்திருக்கிறது.

இப்பொழுதும் எப்பொழுதும்

கண்கள் கட்டப்பட்ட ஒரு பெண். (அது ஆணாகவும் இருக்கலாம்). அதுவே பெண்ணாக இருப்பதினால் அவளுக்கு இழைக்கப்படக்கூடியது இன்னமொரு பரிமாணத்தையும் தொடலாம்.
அவளின் இரு மருங்கிலும் இருவர். அதிகாரம் தந்த பலத்தைப் பெற்றவர்கள். என்னவெல்லாமோ அவளுக்கு நடக்கபோகின்றது என்பதை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அது என்னவென்று திட்டவட்டமாக சொல்லப்படாதபோதிலும், அவர்கள் சொன்னதையே திருப்பி திருப்பி வேறு சொற்களில் சொன்னாலும் அவர்கள் செய்வது ஒன்றைத்தான். துன்புறுத்தல் நிகழ்கிறது. ஆனால் எதிர்ப்பைக்காட்டும் வலுவை அந்தப்பெண் அல்லது அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம், மக்கள்கூட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் உணர்கிறோம்.

அரசியல் ரீதியாக அது அண்மைக்கால அரசியலாக இருந்தாலும் தெளிவான தீர்க்கமான சுய அபிப்பிராயம் கொண்ட பிரித்தானிய நாடக எழுத்தாளரான ஹரோல்ட் பின்ரரின் The New orld Order என்ற நாடகத்தை து~p ஞானப்பிரகாசம் மொழிபெயர்;த்து “இப்பொழுதும் எப்பொழுதும்” என்ற பெயரில் அரங்கேற்றியபோது, அவரது முந்திய நாடகமான “வதை” யின் ஒரு நீள் தொடர்பாகவே இது எனக்குப்பட்டது.

ஒரு யூகத்தை இயக்குனர் மேல் சுமத்துவது என் நோக்கமல்ல. இருப்பினும் சனநாயகத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனமான தலையீடுகளே இரண்டு நாடகங்களினதும் ஆதாரப்பொருளாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இதனால் இவரது நாடகப்பிரதிகளின் தேர்வு தனிப்பட்டரீதியிலும், பொதுவாகவும் மிகவும் தாக்கமுடையதாகவே இருப்பதாகக் கருதுகிறேன்.

“வதை” நாடகம் வரலாற்றின் ஒரு நிகழ்வை, நம்மிடையே வாழ்ந்தவர்களையே பாத்திரங்களாகக்கொண்டு அடக்குமுறையின் வன்மத்தை நிகழ்த்திக் காட்டியது. இந்த நாடகம் அதைக்குறியீடாக பின்ரரின் தனித்துவமான நாடகமொழியில், மௌனங்களுடன், இடைநிறுத்தல்களுடன், இன்னும் தீவிரமாகவே உணர்த்தியது.

மீண்டும், மீண்டும் இங்த இரண்டு நாடகங்களுக்கும் இடையில் நான் உலாவ முயற்சிப்பதை இயக்குனர் மன்னிப்பாராக. ஆனால் என்னால் அதைத் தவிர்க்கமுடியவில்லை. பப்லோ நெருடா என்ற தனிமனிதரும் அவர் சார்ந்த சமூகமும் பாதிக்கப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்வையாளர்கள், “வதை” நாடகத்தை ; பார்க்க முனையலாம். அது இயக்குனரின் நோக்கமாக இல்லாமல் இருந்தாலும் கூட. ஆனால் நாடு, சமூகம், தனிமனிதன் என்று பல தளங்களில் துன்புறுத்தல், அடக்குமுறை, என்பனவற்றை அதிகாரடையவர்கள் - அவர்கள் யாராகவிருந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும், அவர்களிடமிருந்து எதிர்நோக்குவதையும், அவற்றை எதிர்க்கும் திராணியற்று இருப்பதையும் உணர்த்துகின்ற காரணத்தால் இந்நாடகம் அதிகமான பொதுமைப்பண்பு பெறுகிறது.

இந்நாடகத்தில் வரும் பாத்திரங்களைப்பற்றி, நடிகர்களைப்பற்றிச் சொல்வதற்கு முதல், சென்ற ஆண்டு இத்தாலியில், ருறின் நகரில் ஐரோப்பிய நாடக அரங்க விருதைப் பெற்றபின் ஹரோல்ட் பின்ரர் வழங்கிய நேர்முகத்தில் சொன்ன குறிப்பை சொல்வது சுவையாகவிருக்கும்.

“ உங்கள் பாத்திரங்கள் உங்களையே மறுதலித்து, தங்களுக்கான வாழ்க்கைப்போக்கை நிர்ணயித்துக் கொள்வதாக சொல்லியிருக்கிறீர்கள், பிரக்ஞைபூர்வமாக நாடகத்தில் நிகழ்வதையும், பாத்திரங்களையும் ஒழுங்குபடுத்துவது நீங்கள் இல்லையா? “

“ ஒரு நாடகத்தை எழுதத்தொடங்கும்போது அப்படி பிரக்ஞைபூர்வமாக நான் சிந்திப்பதில்லை. பாத்திரங்கள் சுயமாக செயற்படும். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் எனது படைப்பைப்பற்றி பிரக்ஞையுடன் சிந்திக்கத் தலைப்படுவேன். பாத்திரங்களுக்கும் படைப்பாளியான எனக்கும் போராட்டம் நடக்கத்தான் செய்யும். ஆனால் வெற்றி பெறுவது யார்? எழுத்தாளன்தான். என் பேனையை எடுத்து (வெட்டுவது போல சைகை செய்கிறார்) – பாத்திரம் தான் மிக விரும்பும் தனது ஒரு வசனத்தை இழந்துவிடும். (சபையில் சிரிப்பு) ”

இவ்வாறே பின்ரரின் படைப்பை இயக்குனரின் பார்வையில் வெளிக்கொணரும் பாத்திரங்களாக கிங்ஸ்லி செபஸ்தியாம்பிள்ளையும், சேகர் தம்பிராஜாவும், துவாரகாவும் இயங்கினார்கள். வழக்கமாகவே து~pயின் நாடகங்களில் காணும் துல்லியமான அரங்க அசைவுகள், கட்டுக்கோப்பு இந்நாடகத்திலும் இருந்தன.

முடிவாக ஒரு குறிப்பு. சமகால அரசியல் சார்ந்த இந்த நாடகத்தைப் பார்க்கும்போது பின்ரரின் வாதங்களோடு முரண்படுபவராக இருந்தால், பார்வையாளர் வலிந்த ஒரு புரியாப்போர்வையை போர்த்துக்கொள்பவர்களாகி, உள்நுழைய முடியாமல் போகலாம்.


நிறங்களின் நிஜங்கள்

மொழியற்ற, வெறும் இசைக்கோலங்களின் பின்னணியில் நிகழ்த்தப்படும் நடனத்திலிருந்து நாம் பெறுவது என்ன? ஒரு சிலிர்ப்பு. ஒரு அனுபவம். தெரியாப்பொருளை கண்டுபிடிப்பதைவிட தெரிந்ததொன்றை இனங்காணும் சந்தோசம். வெட்டி மறையும் மின்னல் கீற்றை பொந்துக்குள் நுழையும் அணிற்குஞ்சின் வால் நுனிக்கு ஒப்பிடும் ஒரு கவிதை கூறும் விந்தை. புலன்களை கிளர்ச்சி பெறவைக்கும் ஒரு ஆச்சரியம்;. இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்.

இவற்றை முழுமனே பெறமுடியாமல் போனதில் தப்பொன்றுமில்லை. ஆனால் இசைத்தேர்வும் பெருமளவில் அதற்கு உறுதுணையாக இருக்கவில்லை என்ற காரணமாக இருக்கலாம். பச்சை வர்ணத்திற்கான இசையைத்தவிர.

வர்ணங்களின் குணாதிசயங்கள் அறிமுகவுரையில் குறிப்பிடப்பட்டபோது, மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தனது “எலிபதாயம்” திரைப்படம் சம்பந்தமான கருத்தரங்கில் சொன்னது நினைவுக்கு வந்தது.

“எலிபதாயம்” படத்தில் வரும் மூன்று சகோதரிகளும் அணியும் ஆடைகளின் வர்ணங்களை ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக, பச்சை, நீலம், சிவப்பு என்று எதற்காக தேர்ந்தெடுத்தீர்கள் ?”

“ நான் கதகளியாடும் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவன். கதகளி ஆட்டத்தில் ஒப்பனை, ஆடை, அணிகலன்கள் இவற்றின் வர்ணங்கள் பாத்திரங்களின் குணாதிசயங்களை ஒத்ததாகப்பார்த்துக் கொள்வார்கள். நானும் எனது படத்தில் - பாசம், பிள்ளைகள், இரக்கம் உள்ள மூத்த பெண்ணுக்கு பசுமையான பச்சை வர்ணத்தையும், கடல், வானம் போன்ற நிச்சலனமான, அமைதியான இரண்டாவது பெண்ணுக்கு நீல வர்ணத்தையும், நெருப்பு, இரத்தம் என்பனவற்றின் சிவப்பு வர்ணத்தை ஆக்ரோசமான தனது எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் இளைய பெண்ணுக்கும் தேர்ந்தெடுத்தேன் “ என்று பதில் கூறினார்.

பல நடனவகைகளின், (மேற்கத்தைய நடனங்கள் உட்பட்ட) சாயல்கள் தெரிந்தன, துள்ளல்களும், ஒத்திசைவும் நன்றாகவே இருந்தன. வர்ணங்களின் பேதங்களைக்காட்ட இன்னும் அதிகமான நடனமணிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று தொன்றியது.

எது எவ்வாறிருப்பினும், ஆனந்தி சசிதரன் முன்பொருமுறை வழங்கிய “ஐந்திணைகள்” பற்றிய நடன வடிவம் எனக்கு மிகுந்த மகிழ்வைத்தந்தது என்று சொல்வேன்.



சாகாத சரித்திரங்கள்

கரைமீது அலை வந்து அடி பதித்த மணற்சுவடு
காற்றடித்து மணல் வீசும்
கடல் இருந்தோர் அலை வந்து
அலை பதித்த அடிச்சுவட்டை அழித்து அங்கோர் சுவடமைக்கும்

உச்சஸ்தாயியை தொடமுயற்சிக்காத திவ்வியராஜனின் குரலில் இந்த அழகான கவிதை வரிகள் மெல்லிய இசைப்பின்னணியில் மிக இனிமையானதோர் பாடலாக விரிந்து பரவியது.

தொடரப்போகும் சுடுசரங்களுக்கு, வானைக்கிழித்து மேவும் ஒளிகொண்ட வாணவேடிக்கைகளுக்கு, “சுளீர்..சுளீர்” என்ற ஓசையுடன் ஒவ்வொரு முறையும் மடங்கி நிமிரும் சாட்டையின் வீச்சுகளுக்கு, அதாவது சிவசேகரத்தின் ஏனைய கவிதைகளுக்கு முன்னால் வரவேற்பு வாசல் அமைத்ததுபோல முற்குறித்த இசைப்பாடலாக உருவெடுத்த அவரது கவிதை வந்து பொருந்தியது.

கவிதைகளின் தெரிவும் தொகுத்தமுறையும் மிகவும் சிறப்பாகவிருந்தன. அதற்காகவும், ஒரு இளைஞனின் உற்சாகத்துடன். தன் பங்களிப்பை வழங்கியமைக்காகவும் கவிஞர் கந்தவனம் அவர்களை மிகவும் பாராட்டலாம்.

எங்கோ ஒரு வீடு சூறையாடப்படுகிறது
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது
எங்கோ ஒரு குடிசை தீக்கிரையாகிறது
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது
எங்கோ ஒரு மனிதன் கடத்தப்படுகிறான்
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது

என்று தொடங்கும் கவிதை கூறும் சேதிகள் இன்றோடு முடிந்து போகப்போவதில்லை. ஆனால் வல்லாதிக்கங்களைப் போல அவையும் சாஸ்வதமானவையல்ல. உடைந்துவிழும் சிகரங்களைப் போல என்றோ முடிவு பெறும்.;.

மாண்புமிகும் அமெரிக்கச் சனாதிபதி அவர்களே
திடுமென வந்த ஒரு பேரிடி போல
ஒரு விமானம் மோதியதால் அதிர்ந்து
இப்போது எரிகின்ற கோபுரமொன்றுள்
சட்டென மின்சாரம் நின்று போன
அறையொன்றின் உள்ளிருந்து ஒரு
அமெரிக்கக் குடிமகன் பேசுகிறேன்.

சற்றேனும் மிகைத்தன்மை தலைகாட்டாமல் இந்த நீண்ட கவிதையை சிறப்புற வழங்கிய கணபதி ரவீந்திரனும், நிகழ்வில் பங்கு கொண்ட ராஜன், இராஜ்மீரா ராசையா ஆகியோரும் வாழ்த்துக்குரியவர்கள்;.

சிவசேகரத்தின் கவிதைகள் எல்லைகளைக் கடந்து, ஒலிக்கும் மனிதாபிமாளத்தின் குரலாகவும், தேவையான பொழுதுகளில் தட்டிக்கேட்கும் வல்லமை உடையனவாகவும் இருக்கின்றமையால் உயிருள்ள கவிதைகளாக இயங்குகின்றன.

ஆங்காங்கே தலைகாட்டிய தடுமாற்றங்கள் கவிதாநிகழ்வின் வீச்சை சற்றே தளரச்செய்தன. அவ்வளவே.



இரண்டுக்கும் நடுவே

மண(மன)முறிவினால் பிரிந்தபோன ஒரு தம்பதி. அவர்களிடையே தவணை போட்டு பந்தாடப்படும் இரண்டு பிள்ளைகள். அவர்களின் தந்தைவழிப் பாட்டி. எல்லாமே சட்டம் வகுத்த வழியில் சரியாகவே நடக்கின்றதாகத் தோன்றினாலும், சரியாகவே இல்லை என்கின்றனர் பிள்ளைகள். பிழை என்பதாகவே வாதாடும் பாட்டி.

“உங்களுக்கும் அம்மாவுக்கும் ஒத்துப்போகவில்லையென்றதால் பிரிந்து விட்டீர்கள்.. எனக்கும் உங்களுக்கும் ஒத்துப்போகாமல் விட்டால் நான் என்ன செய்வது..?”

இந்த நியாயமான கேள்வியின் முன்வைப்போடு நாடகம் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன.

அந்தக்கேள்விக்கான விடையை பிரிந்து போனவர்கள் தேடுவது போல பார்வையாளர்களாகிய நாங்களும் தேட முனைந்திருப்போம். சட்டம் என்ற வலைப்பின்னலில் பாட்டியுடன இப்படி தன்னிச்சையாகப போக இடம்கொடுக்கப்படுமா என்ற சந்தேகத்தையும் தவிர்த்திருக்கலாம்.

சிறந்ததோர் நாடகப்பிரதி. Counselling சம்பந்தமான குறிப்புகள் சற்று அதிகமாகப் படவில்லையா? குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவேண்டியவர்கள் அவர்களா?

மகனாக நடித்த சிறுவன் சுஜீபன் கலாநாதன் புள்ளிகளை அள்ளிக்கொண்டு போய்விட்டான். அபாரம் என்பது போதாது.

காட்சிக்கான பகைப்புலம் எம் கவனத்தை ஈர்க்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். பலம்தான் சிவமணியின் பிரதியில் இருக்கின்றதே !


அரி ஓம் நம

“ ஒரு குறிப்பிட்ட சமூகம் மாத்திரம் விசித்திரமாகத் எனக்கு தெரியவில்லை. மனித இனமே எனக்கு அப்படித்தான் தெரிகிறது.”

அபத்த நாடகங்களின் முன்னோடிகளில் ஒருவராகக்; கருதப்படும் றொமேனிய- பிரான்சிய நாடகாசிரியரான இயுஜின் அயனஸ்கோவின் மேற்குறித்த பார்வை அவர் எழுதிய நாடகங்களில் பிரதிபலித்தது.

மிகச்சாதாரணமான வழக்கமான நிகழ்வுகளை அபத்தமானவை யாகச் சித்தரிப்பதோடு நின்றுவிடாமல், மனிதர்கள் தனிமைப்பட்டுப்போவதையும் அவர்களது இருத்தலே கேள்விக்குறியாக விளங்குவதையும் அவரது நாடகங்கள் சித்தரித்தன.

வழக்கமான சம்பவக்கோவைகளுடன் ஒரு கதைக்கரு, அக்கதையின் ஓட்டம், உச்சக்கட்டம், தொடர்ந்து வரும் தீர்மானமான முடிவு, இந்த அமைப்பில் நாடகங்களைப்பார்த்து பழகிப்போன ஒரு பார்வையாளர் என்ற இவை சேர்ந்த ஒரு கட்டுக்கோப்பில் இருந்து விடுபட்டு இவையொன்றுமில்லாத ஒரு Anti-theatre என்று சொல்லப்படும் அபத்தநாடக வடிவில் அவரது ஆரம்பநாடகங்கள் அமைந்தன.

20களில், 30களில் நிலவிய பரிட்சார்த்த நாடகங்களை ஒட்டியதாக அபத்த நாடகங்கள் தொடங்கியதாக கருதப்பட்டாலும் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னரே இத்தகைய நாடகப்போக்கு தீவிரமடைந்தது. அடிப்படையில் மனிதவாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்துவதோடு, காலம் காலமாக நிலவிய பெறுமதிகள் அர்த்தமற்றவையாக போய்விட்ட, யுத்தத்திற்கு பின்; தொடர்ந்த காலத்தில் எல்லாம் வழக்கமாக நடப்பதுபோலவே நடக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கும் பார்வையாளர்களை உலுக்கி, வெளியே கொண்டு வருவதுதான் இந்நாடகங்களின் நோக்கமாக இருந்தது.

அயனஸ்கோ தனது ஆரம்பகால ஓரங்க நாடகங்களில் பார்ரவையாளர்களை நாடகத்தோடு ஒன்றிப்போகாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் அன்னியப்படுத்தல் தன்மையுடன், பாத்திரங்கள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளல் சிரமமானதும் பயனற்றவையும் என்பதாக காட்டினார். பாத்திரங்களுக்கு மேலாக சொற்களும், ஜடப்பொருட்களும் தங்களுக்கென்ற தனித்துவத்தன்மை பெறும் வகையில் இந்நாடகங்கள் விளங்கின.

அயனஸ்கோவின் ஆரம்பகால நாடகங்களில் ஒன்றான The Lesson மிகுந்த சிக்கலானதும், அரங்கேற்றத்தில் சிரமத்தையளிக்ககூடியது என்றும் நான் கருதியதுண்டு. ஆனால் பென்னேஸ்வரன் என்பவர் இதைத் தழுவி நேரடிநாடகம் என்று நினைக்குமளவிற்கு வெகுசிறப்பான பிரதியை உருவாக்கியிருக்கிறார்.

மிகுந்த உற்சாகத்துடன் புதிய ஆசிரியரைத் தேடிவரும் ஒரு இளம்பெண், ஏதோ நடக்கப்போவதாக அபாய அறிவித்தல் கொடுத்துக் கொண்டிருக்கும் பணிப்பெண், சித்தசுவாதீனமற்றவரான ஒரு பேராசிரியர்.

ஆரம்பத்தில் புத்திசாலியான மாணவி போலத்தோன்றினாலும், போகப்போக அவள் புத்திக்கூர்மையற்றவள் என்று தெரியவருவதும், கொஞ்சம் கொஞ்சமாக பேராசிரியர் மனம் பிறழ்ந்து போய், பணிப்பெண் எதிர்பார்த்த முடிவை அடைவதுமான இந்நாடகத்தை பார்வையாளர்களும் மிகுந்த வரவேற்புடன் ஏற்றுக்கொண்டமைக்கு பல காரணிகள் உண்டு.

பென்னேஸ்வரனின் மிகச்சிறப்பான பிரதி. புராந்தகன் இயக்குனராக அப்பிரதியின் வலுக்களை புரிந்து கொண்டு கலைஞர்களை ஆற்றுப்படுத்திய சீர்ச்சிறப்பு. பேராசிரியராக நடித்த குரும்பசிட்டி ராசரத்தினத்தின் நடிப்பு.

சொல்வதையே திருப்பச்சொன்னாலும் அதை ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு தொனியில் சொல்வதும், சொல்லிக்கொடுப்பதே ஒரு வெறியாக மாறுவதும், இடையிடையே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதும் - அவரது ஆளுமை முழுமையாகப் தெரியவந்த ஒரு அற்புதமான நடிப்புச் சாதனை.

இவற்றைப்போலவே மாணவியாக வந்த ஷாளினி சண்முகநாதன் தன் அறிவுக்குறைவை வெளிப்படுத்தியதும், பேராசிரியரின் மனப்பிறழ்வினால் பாதிக்கப்பட்டு தன் நோய்களைச்சொல்லும் இடங்களிலும், இறுதியில் வெடித்துச் சிதறுவதிலும் தன்பங்கை சிறப்பாகவே ஆற்றியிருக்கிறார்.

பணிப்பெண்ணாக வந்தவரின் நடிப்பு போதுமானதாக இருந்தது.

அரங்காடலின் வரலாற்றில் அரி ஓம் நம மிகநீண்டகாலத்திற்கு நினைவில் வைத்திருக்கக்கூடிய நாடகம்.

அதுமாத்திரமல்ல 14வது அரங்காடலே ஒரு திருப்புமுனைதான்.

Sunday, September 16, 2007

14வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள் - 1

நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்!
கனடாத் தமிழ் நாடக அரங்கு (2007) குறித்த ஒரு கண்ணோட்டம்!
-
-தேவகாந்தன்-

(மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 14வது அரங்காடல் பற்றிய கருத்தினை மட்டும் இணத்திருக்கிறோம்.)

(3) மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 14வது அரங்க அளிக்கை முக்கியமானது. ஏனெனில் அதன் 13 ஆண்டின் வெற்றிகள், தோல்விகள் யாவும் அனுபவமாகிய ஒரு கூட்டிசைவில் இம்முறை அளிக்கைகள் வெளிவந்திருந்தன என்று கொள்ளமுடியும்.

மனவெளியின் 13வது அரங்காடலில் ‘ மீண்டும் தொடங்கும் மிடுக்கு ’ நாடகத்தை மிக்க கட்டிறுக்கமானதாக, நேர்த்தியானதாக, ரசிக, கலா அம்சங்கள் நிறைந்ததாகத் தந்திருந்த துஷி ஞானப்பிரகாசத்தின் ‘இப்பொழுதும் எப்பொழுதும்’ அளிக்கை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லையென்பது பரவலான அபிப்பிராயமாக இருந்தது. நான் அவ்வபிப்பிராயத்தினுடன் மாறுபடக் காரணமில்லை.

படிமமாய்க் காட்சிகளையும் பாத்திரங்களையும் அமைத்து, தனித்துவமான முறையில் அதை நெறிப்படுத்தியிருந்தாலும், அம் மொழிபெயர்ப்பாக்கம் வலுவின்றியிருந்தது. பார்வையாளன் மனத்தில் ஒரு பாதிப்பினை ஓரளவேனும் கூடத் தந்துவிடவில்லை அது. எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு அரசியல் ப+டகத்துள் நாடகப் பிரதி இயங்கியிருப்பினும் அது வெளிப்பாட்டு முறைமையில் முழுமையற்றுப்போனமை துர்ப்பாக்கியமே. ஹரோல்ட் பின்ரர் இங்கிலாந்தின் நவீன நாடகத்தின் தந்தையெனப் போற்றப்படுபவர். அவரது நவீன நாடகப் பிரதிகள் உலகமெங்கணும் மெச்சி வாசிக்கப்படுபவை. நடிக்கப்படுபவை. மொழியாக்கத்தில் அல்லது தழுவலில் அவ்வரசியலின் அதிகாரத்தை, அதிகாரத்தின் வன்முறையை அளிக்கையாக்கக்கூடிய சொல்லாடல் பலஹீனமாக இருந்தது.

‘ சாகாத சரித்திரங்கள் ’ சி.சிவசேகரத்தின் கவிதைகள் மூன்றினைக் காட்சியாக்கும் முயற்சியாகவிருந்தது. முதலிரு கவிதைகளின் காட்சியளிக்கைகளும் குறிப்பிடக்கூடியளவு இருந்தவேளையில், மூன்றாம் கவிதையின் காட்சியளிக்கை அருமையாகவிருந்தது. மேடையை நோக்கி நிற்றல் என்கிற மரபார்ந்த நாடக மரபினைத் தூக்கியெறிந்துவிட்டு மிக அற்புதமாகக் காட்சியமைப்பைச் செய்திருந்த நெறியாளுகைக்காக வி.கந்தவனத்தையும், அதை அருமையாக நடிப்பில் வெளிப்படுத்திய கணபதி ரவீந்திரனையும் இந்த இடத்தில் பாராட்டவே வேண்டும். தமிழ் நாடக மேடைகளில் கவிதையினைக் காட்சிப்படுத்தும் முயற்சிகள் குறைவு. மிகமிகக் குறைவு. அதை துணிச்சலாக முயற்சியாக்கம் செய்தமையை மனவெளியின் முக்கிய அம்சமாகக் கருதுகிறேன்.

புராந்தகனின் ‘ அரி ஓம் நம! ’ என்ற யூஜின் அனஸ்கோவின் பிரதியது மொழிமாற்ற நாடகமானது, அபத்த நாடக வகையைச் சேர்ந்தது. அபத்த இலக்கிய, கலை முயற்சிகள் நாடகம் மேற்குலகில் நவீனம் பெறத் துவங்கிய காலத்தைச் சேர்ந்தவை. அந்த அபத்த வகைக்கான தேவை இன்றும் நம் நாடக அரங்க, சமூகத் தேவையாக இருப்பினும், அதை மனப்பிறழ்வின் அங்கமாக வாசகன் அனுபவமாய் அடையும் சாத்தியத்தை ஏற்படுத்தாமற் போனமை ஏன் ? பிரதியின் அதிநீளம் அவ்வாறான நிலையை ஏற்படுத்தியிருக்க முடியுமா? அப்படியென்றுதான் தோன்றுகிறது. ஒரு தனி அரங்க நிகழ்ச்சியாக இதை நன்கு ரசிக்க முடிந்திருக்குமென்பது என் நிலைப்பாடு.

இடம், காலம் போன்றவைகூட பல்நாடக அளிக்கை அரங்கில் முக்கியமானவை என்பது ஞாபகம் கொள்ளப்படவேண்டும்.

‘இரண்டுக்கும் நடுவே’ என்ற இளையபாரதியின் நாடகம் சாதாரண பார்வையாளனுக்கானது. ஆனாலும் அது நடிப்பினாலும், எடுத்துக்கொண்டிருந்த கருப்பொருளினாலும் கனடாத் தமிழ்ச் சமூகத்திடையே நிலவும் குடும்ப உறவுகளுக்கிடையேயான அவலங்களை, அழுத்தங்களை வலுவாகச் சொல்லியிருந்தது. இதில் பெண்ணின் நிலைநின்ற நியாயம் - அவள் தனியே வாழவேண்டி நேர்ந்தமைக்கான காரணத்தையும் அதற்கான உரிமையையும் வெளிப்படுத்தும் அக்கறை காட்டப்படவில்லையெனினும், பெண்ணாக அல்லாமல், பெண்ணை பெற்றாரில் ஒருவராகக் கொண்டு, பிள்ளைகளின் நலன்கள் பேணப்படவேண்டும் என்ற வன்மையான கருத்தைக் கொண்டிருந்தவகையில், பார்வையாளன் சாந்தமாகிப்போக முடிந்திருந்தது.

இறுதியாகச் சொல்ல விரும்புவது ‘ நிறங்களின் நிஜங்கள் ’ பற்றி... நிறங்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் பாரிய தொடர்புகள் இருக்கின்றன. கீழ்த் திசை மரபிலேயே மதம், கலை சார்ந்து பல்வேறு விளக்கங்கள் உள்ளன. இந்த விளக்கங்களை மீறிய விஞ்ஞான ரீதியான தொடர்பாடல்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வறுமையின் நிறம் சிவப்பு என்று ஒரு சினிமாப் படத்தின் தலைப்பு சொல்கிறது. சிகப்பு விளக்குப் பகுதி என்பது மும்பையில் விபச்சாரிகள் தொழில் நடத்தும் அனுமதிப் பத்திரம்பெற்ற ஸ்தலம். இதையே தென்கொரியாவில் மஞ்சள் வீட்டுப் பகுதி என்பர். சாலைகளில் வாகன நிறுத்தத்திற்கான அடையாள விளக்கும் சிகப்புதான். சிவப்பு எதற்காக அவ்வாறு வைக்கப்பட்டதென்பதற்கு, விஞ்ஞான ரீதியான விளக்கமுண்டு. அந்த நிறம்தான் நீண்டதூரம் தெரியக்கூடிய நிறமென்பது நிறுவப்பட்ட உண்மை. அதுபோல் சிவப்பு, நீலம் என்பன மின்சார நேர்த் திசை, மாறுதிசை மின் வலுக்களின் நிறமாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன. பச்சை ‘ஏர்த்’ எனப்படும் நிலக்கடத்தல் பகுதியாக நிற்கும். நாடுகளிடையே நிறம் சார்ந்து வித்தியாசமான விளக்கமுண்டு. ஆனாலும் அவை நிறம்பற்றி ஏதோ ஒருவகையில் அர்த்த அமைப்புக்களைக் கொண்டிருக்கின்றன.

தமிழ்ச் சூழலில் மஞ்சள் அதுபோல் மரபார்ந்து மங்களகரத்துக்கானதென்றும், கறுப்பு அமங்கலத்துக்கும், வெள்ளை வெறுமைக்கும் அடையாளங்களென்றும் நாம் சொல்லித்தரப்பட்டிருக்கிறோம். இந்த நிறங்கள் மனித உணர்வுகளுடன் மிகநெருங்கிய தொடர்புடையன. பச்சை நீலம் மஞ்சள் சிவப்பு என்பன அதுபோல் ஒவ்வொரு மனித உணர்வுகளைக் குறிக்க சினிமாக்களில் மட்டுமில்லை, சினிமாக் காலத்துக்கு முன்பிருந்தே கூத்துகளிலும் தெருநாடகங்களிலும் பாவனைக்கெடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வர்ணங்களே. இதை ஆடல் கலையில் உணர்வுகள் பீறிட அரங்காக்கப்பட்ட நிகழ்வுதான் ‘ நிஜங்களின் நிறங்கள்’.

இப்போது உடல்மொழி வகையான இந்த நவீன நடனத்தைப் பற்றி நான் சொல்லலாமென நினைக்கிறேன். தமிழில் சதிர் புராதனமானது. இதை ஒருவகையில் தமிழ் நடனவகையாகக் கொள்ளலாம்தான். பரதம் அதிலிருந்து செழுமைப்படுத்தப்பட்ட நடன வகையென்பது ஆய்வாளர்களால் இப்போது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிற முடிவு. இந்த பரதத்தை தமிழ்ப் பரப்பில் நவீன வடிவமாக்க முயன்று வெற்றிபெற்றவராக மறைந்த சந்திரலேகாவைச் சொல்லவேண்டும். பரதத்துடன் பல்வேறு நடன வகைகளைக் கலந்து இந்த நவீன நடன வகையை தமிழுலகுக்கு அறியத் தந்தவர் அவர்தான் எனவே நினைக்கிறேன். இதில் பரதம் மட்டுமல்லாது, யோகாசன முறைமை, பாலே நடனம் போன்றவற்றின் கூறுகளும் கலந்துள்ளன. மட்டுமில்லை. தப்பாட்டம்போன்ற இசைகளையும், களரிக்காரர்களின் ஆட்டவகைகளையும்கூட இது கொண்டிருக்கும். வெறும் அசைவுகள் மூலம் மனித மன உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியுமென நிறுவியதோடு மட்டுமல்லாது, அதை நிகழ்விலும் நிகழ்த்திக் காட்டியவர் சந்திரலேகா. அவருக்கு உடலென்பது ஒருவகை மொழி. ஓவ்வொரு அசைவிலும் சொல் பிறக்கிறது. இந்த உடம்பு கொண்டிருக்கும் ரகசியங்கள்போல், அதன் மொழியும் ரகசியமானது. அந்த மொழிமூலம் நவீனம் புனையும் முயற்சியே உடல்மொழி நடனவகையான இதன் முக்கியமான அம்சம்.

இது இந்தியாவில் எண்பதுகளில் வீச்சுப்பெற்று வளர ஆரம்பித்த ஒரு நடனவகை என்றால் தப்பில்லை. ஆனால் சமீப காலமாகத்தான் இந்த நவீன நடன வகை கனடாவில் பயில்வுபெற ஆரம்பித்திருக்கிறது. இது சந்திரலேகாவின் மாணவர்களுள் ஒருவரான சுதர்சன் துரையப்பாவின் கனடா வருகையுடன் ஆரம்பித்ததெனக் கூற முடியாவிட்டாலும், இக்காலகட்டத்துக்கு முன்பின்னாக மிகுந்த கவனம்பெற்றிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.

உடல்மொழி வகையான இந் நவீன நடன வகைக்கு அசைவுகளே போதுமானவைதாம். இசை அதற்கும் கூடுதலான ஒரு அம்சம். ‘நிறங்களின் நிஜங்கள்’ அளிக்கையில் இசையின் வலுவைவிட அசைவுகள் காத்திரமானவையாக இருந்தன என்பது என் எண்ணம். நடனத்துக்கு இசையானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததென்பது சிறந்த நடன ஆசிரியை திருமதி வசந்தா டானியலின் கருத்தாகும். உடல்மொழி வகை நடனத்திலும் இசை முக்கியமானதே. ஆனாலும் வேறெந்த நடனவகையைவிடவும் இவ்வகை நடன முறைமைக்கு பாடல் மட்டுமன்றி, இசையும் தீவிரத் தேவையை இழந்தே நிற்கிறதென பல நவீன நடனகாரர் வாயிலாக அறிய முடிகிறது. இதை ஒரு நவீன நடனம் என்பதற்காக மட்டுமின்றி, அதன் அறுதியான உணர்ச்சி வெளிப்பாட்டுத் திறனுக்காகவும் நமது நடனகாரர் இதை முன்னெடுக்க முன்வரவேண்டுமென்பது எனது ஆவல்.

இவ்வாண்டு நாடக அளிக்கைகளில் இன்னுமொன்றை அவதானிக்க முடிந்தது. முந்திய ஆண்டுகளைவிட இம்முறை ஒளியமைப்பில் வெகுவான கவனம் செலுத்தப்பட்டிருந்ததைச் சொல்லவேண்டும். ஓலியமைப்பும் கூடுதலான கவனத்தைப் பெற்றிருந்ததையிட்டு என்போன்றவர்களுக்கு மகிழ்ச்சியே. மிக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒளி, ஒலி அமைப்புக்கள் அண்மைக்காலம்வரை நமது நாடக மேடைகளில் கவனிப்பற்றிருந்ததைப்பற்றி, அவ்வப்போது நாடக அளிக்கைகள் குறித்த என் கருத்துரைகளின்போது நான் குறிப்பிட்டே வந்திருக்கிறேன்.

இன்னொன்று குறிப்பிடப்படவேண்டியது. அதுதான் பிரதியாக்கம். இந்தத் தடவை அதிகமான மொழிபெயர்ப்பு நாடகங்கள் மேடையேறியிருந்தன. ஓவ்வொரு ஆண்டுகளிலும் இது நிகழ்ந்தே வந்திருக்கிறது என்பது ஞாபகம்கொள்ளப்படவேண்டியது. தமிழில் நாடகப் பிரதியாக்கங்கள் குறைவு. குறிப்பாக கனடாத் தமிழ்ப் புலத்தில் மிகக் குறைவு. இதை ஈடுசெய்ய பிறமொழியாக்கங்களைநோக்கி நகரவேண்டிய துர்ப்பாக்கியம் நமது நாடக நெறியாளுநர்களுக்கு ஏற்பட்டதாயிருக்கலாம். ப.அ.ஜயகரன், புராந்தகன், சகாப்தன், செழியன் போன்றோரின் ஈடுபாட்டினால் கனடா மண்ணில் தமிழ் அரங்கு எதிர்கொண்டிருக்கும் இக்குறைபாட்டை நிவர்த்திக்க முடியும்.

வருங்காலங்களில் தமிழ் நாடக அரங்கில் இன்னும் வலுவான அளிக்கைகள் பார்வையாளனை அடைய முடியுமென்ற நம்பிக்கை எவருக்கும் ஏற்பட இவ்வாண்டு அளிக்கைகள் போதுமானவையே.

bdevakanthan@yahoo.com.

(நன்றி - பதிவுகள்)

Saturday, September 15, 2007

14வது அரங்காடல் தொடர்பான கட்டுரை

ஹரல்ட் பின்றரின் அரசியலும் நாடகங்களும் - (பரபரப்பு)

துஷி ஞானப்பிரகாசம்

2005ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 15 திகதி, அந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் விருது, இங்கிலாந்தை சேர்ந்த நாடகாசிரியர் ஹரல்ட் பின்றருக்கு வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான கணமே அதைப் பற்றிய சர்ச்சையும் ஆரம்பமானது. ஹரல்ட் பின்றர் இலக்கியத்திற்கான நோபல் விருதுபெறுவதற்கு தகுதியானவர் என்பதில் மாற்றுக்கருத்து இருந்துவிட முடியாது. ஆகவே சர்ச்சை அதைப்பற்றியதல்ல. அந்த விருது வழங்கப்பட்ட காலம்தான் சர்ச்சைக்குரியதாக இருந்தது.

விருது அறிவிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், தான் நாடகங்களை எழுதுவதை நிறுத்திவிட்டதாக பி.பி.சி.யுடனான நேர்காணல் ஒன்றில் பின்றர் தெரிவித்திருந்தார். “நான் இதுவரை 29 நாடகங்களை எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். அது போதுமானது” என அவர் கூறினார். “நான் நாடகங்களை எழுதுவதை நிறுத்திவிட்டாலும், கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிடவில்லை” என்றும் அவர் கூறினார். பின்றர் ஒரு கவிஞராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், கட்டுரையாளராகவும்கூட அறியப்பட்டிருக்கிறார் என்றாலும், இலக்கியத்திற்கான அவரின் முக்கிய பங்களிப்பு அவரது நாடகங்களாகவே இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாடக ஆசிரியருக்கு, அவர் நாடகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டபின் எதற்காக விருது வழங்கவேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்வியின் பின்புலத்தை ஆராய்ந்தால், இந்த கேள்விக்கான காரணம் இலக்கியத்தின் மீதோ அல்லது நோபல் பரிசின் மீதோ உள்ள அக்கறை அல்ல என்பது தெரியவரும். இதற்கான முக்கிய காரணம் விருது அறிவிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டிலும், அதற்கு முந்திய ஒரு தசாப்தமாகவும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை காட்டமாக விமர்சித்துவந்த முக்கியமானவர்களில் ஒருவராக பின்றர் இருந்திருக்கிறார். 2005ஆம் ஆண்டு காலகட்டத்தில்; ஈராக் மீதான போரை வன்மையாக எதிர்த்துவந்த பின்றர், தனது அரசியல் செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவதற்காகவே தனது எழுத்துப் பணிகளை குறைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆகவே சர்ச்சை, ஹரல்ட் பின்றர் என்ற நாடகாசிரியருக்கு விருது வழங்கப்பட்டது பற்றியதல்ல. ஹரல்ட் பின்றர் என்ற அரசியல் செயற்பாட்டாளருக்கு விருது வழங்கப்பட்டது பற்றியதே. இதை ஹரல்ட் பின்றரும் கூட ஏற்றுக்கொண்டிருக்கிறார் என கூறலாம். தனக்கு நோபல் விருது வழங்கப்பட்டது பற்றிக் கூறுகையில் அவர் “நான் ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக நாடகங்களை எழுதுகிறேன். நான் அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவனாக இருக்கிறேன். நான் அரசியல் ஈடுபாடு உடையவன் என்ற உண்மை எவ்வளவு தூரம் இந்த விருதுக்குக் காரணமாக இருந்தது என என்னால் உறுதியாக கூறமுடியாதுள்ளது” என கூறினார்.

பின்றரின் இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள், அவருக்கான விருதையும் எதிர்த்து சர்ச்சை கிளப்பினாலும், பின்றரின் எழுத்துக்களில் இருந்து அரசியலையும் சமூக அக்கறையையும் பிரித்துவிட முடியாது என்பதே உண்மை. 1950ஆம் ஆண்டு தனது இருபதாவது வயதில் தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டதோடு அந்த காலகட்டத்திலேயே ஒரு தொழில்முறை நடிகராகவும் தனது வாழ்க்கையை ஆரம்பி;த்த பின்றர், அக்காலத்தில் இருந்தே சமகால அரசியலிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்கிறார். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்திய அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை விமர்சிப்பவராக, சித்திரவதைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பவராக, பேச்சுச் சுதந்திரம் எங்கு ஒடுக்கப்பட்டாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்பவராக, துருக்கியினால் ஒடுக்கப்பட்ட குர்திஷ் மக்கள் சார்பாகவும், நேற்றோ படைகளால் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சேர்பிய மக்களுக்காகவும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குள்ளான ஈராக்கிற்காகவும், மேற்குலக நாடுகளால் சுரண்டப்படும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்காகவும் உலக அரங்கில் பரிந்து பேசியவராக பின்றர் இருந்திருக்கிறார். இதை நோபல் விருதுக்குழுவும் அங்கீகரிக்கிறது. பின்றருக்கு வழங்கப்பட்ட நோபல் விருதுக் குறிப்பில் ‘பின்றரின் எழுத்துக்கள் ஒடுக்குமுறைகளின் பூட்டிய அறைகளுக்குள் பலாத்காரமாக நுழைகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்றரின் நாடகங்கள் எல்லாமே வெளிப்படையான அரசியல் பின்புலம் கொண்டவை என்றும் கூறிவிட முடியாது. “நான் அரசியலில் மிக ஆழமாக ஈடுபட்டுள்ளேன். கலையிலும்; மிக ஆழமாக ஈடுபட்டுள்ளேன். சில வேளைகளில் இவை இரண்டும் சந்திக்கின்றன. சில வேளைகளில் சந்திப்பதில்லை” என பின்றர் கூறுகிறார். பின்றர் நாடகத்துறையுள்; நுழைந்த காலத்தில் பிரபல நாடக ஆசிரியராக விளங்கியவரும், பிற்காலத்தில் பின்றரின் நண்பராக இருந்தவருமான சாமுவல் பெக்கற் (Samuel Beckett) பின்றர் மீது பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறார் என்பதை பினறரின் நாடகங்களில் இருந்த அறிந்துகொள்ள முடிகிறது. பெக்கற்றின் நாடகங்களின் அபத்தப் போக்கை பின்றரும் பின்பற்றியிருக்கிறார். மனித வாழ்வி;ன் நிலையின்மை, மனித வாழ்க்கையின் அபத்தத்தன்மை, மனித நினைவுகளின் நம்பகமற்ற தன்மை போன்ற விடயங்கள் பற்றி பெக்கற்றின் நாடகங்கள் பேசியது போலவே பின்றரின் ஆரம்பகால நாடகங்களும் பேசின. அதற்கும் மேலே ஒரு படி சென்று, மொழி அபத்தத்தன்மை உடையது, மனிதர்கள் மொழியை உண்மையான உறவாடலுக்கு அதிகம் பயன்படுத்துவதில்லை, மாறாக உளமார்ந்த உறவாடலை தவிர்த்துக்கொள்ளவே மொழியை அதிகம் பயன்படுத்துகிறார்கள் போன்ற கருத்துக்களும் பின்றரின் நாடகங்களில் பொதுவான கருத்துகளாக வலியுறுத்தப்பட்டன. எனினும் இவை கூட பின்றரின் அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பு கொண்டனவே என கூறுகிறார் நாடக விமர்சகரும், பின்றரின் சரிதையாளருமான மைக்கல் பிலிங்றன் (Michael Billington). “பின்றரின் ஆரம்பகால நாடகங்கள் பால், குடும்பவாழ்வு, திருமணம் போன்றவற்றின் ஒடுக்குமுறை அரசியல் பற்றி பேசுகின்றன. பிற்கால நாடகங்கள் அரசியல் பற்றிய தனிநபர் நிலைப்பாடுகளால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி பேசுகின்றன” என பிலிங்றன் கூறுகிறார்.

பின்றரின் நாடகங்கள் எழுதப்பட்ட காலத்தை வைத்து அவற்றை ஆரம்பகால நாடகங்கள், பிற்கால நாடகங்கள் என சுலபமாக பிரித்துவிடலாம். ஆனால், அவரின் பல நாடகங்களை வெளிப்படையான அரசியல் நாடகம் என்றோ அல்லது ஆழ்ந்த சமூக விமர்சனம் என்றோ பிரித்துவிடுவது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த சிக்கலுக்கும் பிலிங்றனே மிக சுவையான தீர்வு கூறுகிறார். “பின்றரின் நாடகங்களைப் பார்ப்பதில் உள்ள பாதி சுவாரஸ்யம், அவை எதைப்பற்றியவை என உறுதியாக கூறமுடியாது இருப்பதுதான்” என்கிறார் பிலிங்றன்;. இந்த வகையில், தனது நாடகங்களை புரிந்துகொள்ளும் உரிமையை, தனது எழுத்துக்களுக்கு விளக்கம் கற்பிக்கும் உரிமையை பின்றர் மக்களிடம் இருந்து எடு;த்துக்கொள்ளவில்லை. தனது வாழ்வையும் கலையையும் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கென பெரிதும் செலவிடும் ஹரல்ட் பின்றருக்கு அதுதான் அழகும் கூட.

நாடகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டாலும், ஒரு நடிகனாக, இயக்குனனாக, பேச்சாளனாக, எழுத்தாளனாக ஹரல்ட் பின்றரின் அரசியல் பயணமும், நாடகப் பயணமும் கைகோர்த்துத் தொடர்கின்றன.

Friday, September 14, 2007

13வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள்

இரண்டு நாட்களில் மூன்று நாடகங்கள்- திருமாவளவன்

(13வது அரங்காடல் பற்றிய பகுதியை மட்டும் இணைத்திருக்கிறோம்)

புராந்தகனின் ‘துயரில் தோயும் தூரிகை’, சுந்தர ராமசாமியின் ‘சீதை மார்க் சீயாக்காயத் தூள்’ என்ற சிறுகதையை மூலமாகக் கொண்ட பிரதி. இதே மூலக்கதையை ஏற்கனவே இரண்டு தடவை தமிழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் நாடகமாக மேடையேற்றப் பட்டதாக அறிந்திருக்கிறேன். புராந்தகனிடம் இது தொடர்பாக வினாவிய போது நாடக ஒத்திகையின் இறுதி நாட்களில்தான் தனக்கு இவ்விடையம் அறியக்கிடைத்தது எனக் கூறினார். எனது வியப்பெல்லாம், சுந்தர ராமசாமி நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதை எழுதியிருந்த போதும் குறிப்பிட்ட சிறுகதை எப்படி இருநாடக இயக்குனர்களை கவர்ந்ததென்பதே.

புராந்தகன் மூலச் சிறுகதையை சிறிதளவும் சிதைக்காது, அதேவேளை ஒவியருக்கும் வியாபாரிக்குமான உரையாடைலை சற்று நீட்டியிருந்தார். அது மூலக்கதைக்கு மேலும் மெருக்கூட்டுவதாக அமைந்தது. பின்புற நடு மேடையில் ஓவியம் வரைவதர்க்கான சீலை வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஒவியம் வரையும் போது, அல்லது அதை இரசிக்கும் போது நடிகர்களின் முக உணர்வுகளை அனுபவிக்க முடியவில்லை. நடிகர்கள் நடிப்பாற்றலால் நாடகத்துக்கு மேலும் சிறப்புத் தந்தனர். ஏற்கனவே மாஹாகவியின் ‘கோடை’, குழந்தை சண்முகலிங்கத்தின் ‘எந்தையும் தாயும்’ போன்ற நல்ல நாடகங்களை இயக்கிய நாடக அனுபவம் உள்ளவர் இவர். புகலிடத் தமிழர்களுக்கு நாடகம் என்பது அமைச்சூர் வகை சார்ந்ததுதான். (இலக்கியமும் கூட) இவர்களுக்கு இவை முழுநேரத் தொழில் அல்ல. அல்லது இலாபந்தருவதும் அல்ல. ஆத்ம திருப்திகாக சிரமங்களிடையே செய்வது. புராந்தகனுக்கு இப்படி நாடகம் செய்ய வாய்பிருப்பது பாராட்டப்பட வேண்டியதே. இருந்தாலும், இவர் மேடை தொடர்பாக இன்னும் கரிசனை கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.

இளைய பாரதியின் ‘வெட்க வில்லைகள்’ ஏற்கனவே ஓரிரு தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம். இவர் இன்றைய ஈழ அரசியல் நிலையின் படிமமாக ஒரு கனேடிய தமிழ் குடும்பத்தை மேடையில் அமர்த்தியிந்தார். இதை படிமம் என தெரியப்படுத்துவதற்காக ஒப்பனையையும் நாடக மாந்தர்கள் பேசும் மொழியையும் செயற்கைத்தனமாக்கியிருந்தார். இவை மட்டும் நாடகம் கூற வந்த படிமத்தை புரிந்து கொள்வதர்க்கு போதுமானதாக இருக்கவில்லை. இதில் சிக்கல் என்னவெனில் இளையபாரதியிடமிருந்து இந்த அளவுக்கு உத்திகள் நிறைந்த ஒரு நாடகத்தை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் பார்வையாளர்களிடம் தேடல்; ஏதும் இருக்கவில்லை. உதாரணமாக, இது சக்கரவர்த்தி அல்லது திருமவளவனின் நாடகம் என்று சொல்லியிருந்தால் பார்வையாளர்கள் அந்த நாடகத்தை முழுமையாக அனுபவித்திருப்பார்கள்.

எனக்கு நாடகம் பேசிய விடையத்துக்கப்பால், அவர் பாவித்த உத்திகள் ஆச்சரியப்பட வைத்தது. ஒரு நல்ல நாடகத்தைப் பார்த்த அனுபவம் கிடைத்தது

(நன்றி - திருமாவளவன் வெளி)

* துயருக்குள் தோயும் தூரிகை - 2வது மேடையேற்ற்ம் பற்றிய கருத்து - வெற்றிமணி

Thursday, September 13, 2007

12வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள்

12வது அரங்காடல் - -தான்யா

நான் 98 இல் பார்த்த அரங்காடலைப்பற்றிய மனப்பதிவு மிகவும் அற்புதமாய் இருந்தது. இன்றும் அந்த உணர்வு தந்த பாதிப்பிலேயே அரங்காடல் பார்த்து வருகிறேன். நல்ல நாடகங்கள் நல்ல நடிப்பு எல்லாவற்றிலும் ஒரு முழுமையை பேணிய காலம் அது. இன்று மிகவும் மலிவான இரசனையை மக்களிடம் புகுத்தி பணம் பண்ணும் முயற்சியாகவே அரங்காடல் இருக்கிறது. நிறைய நடிகர்கள், பற்றாக்குறையின்றி நடிக்கும் நல்ல நடிகைகள் என்று முன்னோக்கி வந்த போதும். நல்ல தரமான நாடகப் பிரதியாளர்கள் இன்றி 'வெறும்' நாடகங்களாய் மட்டுமே ஆகி விட்டது.

1999 ஆம் ஆண்டில் 10க்கு மேற்பட்ட நடிகர் நடிகைகளைக் கொண்டு மேடையேற்றிய குழந்தை சண்முகலிங்கத்தின் 'அன்னையிட்ட தீ' அப்போதைய அமைதியற்ற சூழலில், போரால் ஏற்பட்ட உளவியல் பிரச்சனைகளை எடுத்து வந்து 'அன்னை இட்ட தீ', பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக ஆட்கொண்டது. வழமையான பழமைவாத கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அது மீள்பிரதியாக்கம் செய்யப்பட்டபோது தனித்துவமாய் இருந்தது.

2005 இல் அரங்காடல் தன் பேரை மட்டுமே தன்னகத்தில் வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மறுபடியும் குழந்தை சண்முகலிங்கத்தின் 'நரகோடு சுவர்க்கம்" என்ற நாடகம் மேடையேறியிருக்கிறது. அதை நான் பிரதியாய் வாசித்ததில்லை ஆதலால் நாடகத்தில் என்ன மாற்றம் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லமுடியவில்லை. ஆனால் இன்றைய காலத்திற்குப் பொருந்தாமல் இடப்பெயர்வு செல் அடி போன்றவையை மேடையில் பார்த்தபோது, பார்வையாளர்களிடத்தில் சலிப்பைத்தான் காணமுடிந்தது. 'இந்த நேரத்தில் எதற்கிந்த நாடகம்' என்ற எரிச்சலைத் தவிர வேறெந்த உணர்வும் வரவில்லை. நாடகத்தில் இடம்பெயர்ந்துபோனவர்கள், திரும்பி வந்து தங்கள் வீட்டை வர்ணிக்கையில், 'எங்கட வீடு கற்பழிக்கப்பட்டிருந்தது' என்கையில் வீட்டைப் பெண்ணாக ஒப்பிட்டிருப்பார்கள். இந்த பழைய கற்புசார் மதீப்பீடுகள் கொண்ட இந்த வசனத்தை மீள்பிரதியாக்கம் செய்தவர் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில், 'அரங்காடல்' போன்ற முற்போக்கின் பிரதிநிதிகளிடம், 'இவற்றை விமர்சிக்க வேண்டியிருக்கிறதே' என்பது அயர்ச்சி தருகிறது.

முன்பெல்லாம் அரங்காடலைச் சேர்ந்தவர்கள் இந்த பள்ளிக்கூட ஒன்றுகூடல்கள் மற்றும் வானவில் திரையிசை நடனங்களை நக்கலடிப்பார்கள். குறிப்பாக ஊரைப்பற்றி எடுக்கும் நாடகங்களை அவர்கள் மிகவும் மோசமாக விமர்சிப்பார்கள். இன்று அவர்களே அந்த இடத்தில்தான் வந்து நிக்கிறார்கள்! சென்ற அரங்காடல்களைப் பற்றியும் இதே மாதிரியான மனப்பதிவே மிஞ்சுகிறது. இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின்பு வந்த அரங்காடல்கள் தம் கலைத்தன்மையை முற்றாக இழந்து விட்டன. இனி என்கிற நம்பிக்கையும் போய்விட்டது. வெறும் கேளிக்கையாகவும், அரங்காடல் என்பது ஒரு உயர்வர்க்கத்தினர் விழாவாகவும் ஆகிவிட்டது.

இரண்டாவதாக அரங்கேற்றப்பட்டது சகாப்தனின் 'அரியது கேட்பின்...' ஒரு வித்தியாசமான முயற்சி என்று சொல்லலாம். விஞ்ஞானத்தால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது என்ற கருத்தை வைத்து எடுத்திருந்தார்கள். 'பார்த்தவற்றுள்' இது பரவாயில்லை. வித்தியாசமான முயற்சி நல்ல நடிப்பு.

'மறுமுகம்' என்ற நாட்டிய நாடகத்தைப் பற்றிச் சொல்லுவதற்கு முன்னம் இன்டிகோ (Indigo) என்கிற -1999ம் ஆண்டு அரங்காடல் அரங்கில்- சுதர்சன் அவர்கள் போட்ட நாடகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். சுதர்சன் இன்டிகோவில் பெண்ணுக்கும் இயற்கைக்குமான தொடர்பை நவீன முறையில் யோகா அடிப்படையில் நடனம்
அமைத்திருந்தார். மேடையில் பருத்த கறுப்புப் பெண். பெரிய இடைகளைக் கொண்ட அந்தப் பெண்ணின் உருவமோ வழமையான அழகுசார் மதிப்பீடுகள் அற்று நடனமாய் மட்டுமே இருந்தது. பூவிரிவது போல அவள் கால்களை விரிப்பாள் அந்தப் பெண், பிறப்பை சொல்வதென்று நினைக்கிறேன். அவர் அதை பரதநாட்டிய அடிப்படை முறையிலேயே எடுத்திருப்பார். அப்போ சுதர்சன் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானார். குறிப்பாக அந்த கறுத்தப் பெண் மற்றும் அவள் உடல் அசைவுகளே கலாச்சாரவாதிகளாலும் பெண்களாலும் விமர்சிக்கப்பட்டது. சுதர்சனிடம் 'ஏன் தமிழ் பெண்ணை நடிக்க வைக்கவில்லை' என்று கேட்ட போது அவர்கள்யாரும் நடிக்க மாட்டார்களே என்று சொன்னார். ஆமாம் தமிழ் பெண்கள் யாரும் கால்களை விரிக்க மாட்டார்கள்தான். இந்த நேரம் மாலினி பரராஜசிங்கம் அவர்களையும் நினைவு கூற வேண்டியிருக்கிறது. தான் கற்ற பரதநாட்டியத்தை அதே பழைய ஆடம்பரமான தன்மையிலிருந்து மாற்றி "தனிமரம்" போன்ற வித்தியாசமான முயற்சிகளும் செய்திருக்கிறார்கள்.இந்த பின்னணிகள் பற்றிய அறிமுகம் "மறுமுகம்" நாட்டிய நாடகத்திற்கு தேவையாய் இருக்கிறது. ஏனெனில் இதில் நடித்த எவருக்கும் இந்தத் தகவல்கள் தொ¢யாது. அவர்கள் மேடையில் நிகழ்த்தியது ஒரு திரையிசை நடனத்திற்கு ஒப்பானது. அன்று சுதர்சனை விமர்சித்த கலாச்சார காவலர்கள் இதை விமர்சிக்கப் போவதில்லை ஏனெனில் மேடையில் இந்த நடனத்தை நிகழ்த்தியவர்கள் நாங்கள் எல்லோரும் பார்க்க விரும்புகிற இளைய தலைமுறைப் பெண்கள். சினிமாவிலோ நாடகங்களிலோ பாத்திராத யதார்த்தமான ஒரு பெண்ணை சுதர்சனால் படைக்க முடிந்தது. அவர் அதை ஒரு புதிய முயற்சியாய் எடுத்துக் கொண்டார். அது பலருக்கு உறுத்தியது. ஏனெனில் அந்தக் கறுத்தப் பெண்ணின் உடல் இந்த 'முற்போக்கு' ரசனைக்கு உரியவர்களும் பார்க்க விரும்புகிற ஒன்று அல்ல. ஆனால் இந்த திரையிசை நடனத்திற்கு பலரது அபிப்பிராயம் 'இளம் பிள்ளைகள் ஆடினார்கள் பார்க்கலாம்தானே!'.

அம்பை ஒருமுறை அவரது பேட்டியில் சொல்லியிருந்தார் தங்கட வீட்டில் ஒரு நாய் வளர்த்தார்களாம் அந்த நாயை அவர்களுடைய அம்மா சமையல் அறைக்குள் விடுவதில்லை ஆனால் அந்த நாய் என்ன செய்யுமென்றால் அது முக்காவாசி
உடம்பை கிச்சினுக்குள்ள வைச்சுக்கொண்டு ரெண்டு கால மட்டும் வெளிய வைச்சிருக்குமாம், வெளியேதான் இருக்கிறேன் என்கிற மாதிரி... அப்படித்தான் இந்த நடனம் பார்க்கும் போது எனக்குத் தோணியது. அதாவது அவர்கள் ஆடியது ஒரு திரையிசை நடனம் (நீங்க உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு துள்ளல் பாட்டைப் போடலாம்) ஆனால் குழந்தை துஸ்பிரயோகம் எயிட்ஸ் போன்ற விசயங்களை எடுத்து அவர்கள் தாங்கள் போட்டது ஒரு புதுமையான நாடகம் என்ற உணர்வை உண்டு பண்ண முயன்றார்கள். (அரங்காடலின் தற்போதைய நிலைப்பாடும் இதுவே.

நாங்கள் முற்போக்காளர்கள், எங்கள் முற்போக்கு கீழே விழாதபடி நாடகங்களும் 'பாவனையோடு' இருந்தால் போதுமானது.) ஆனால் இவர்கள் கெட்டிக்காரர்கள் சுதர்சனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவர்களிடம் கேட்கப்படமாட்டாது ஏனெனின் வித்தியாசமாய் மரபை மீறி இவர்கள் எதையும் செய்யவில்லை, செய்யப்போவதுமில்லை.

1999 களிற்குப்பின் சுதர்சனை அரங்காடலும் மறந்து போனது. அரங்காடலுக்காக தர்சினி இயக்கிய(?) இரண்டாவது நடனம் இது. இதிலிருந்து பெண்கள் குறித்தும் இன்ன பிற விடயங்கள் குறித்தும் எதை இவர்கள் மேடையேற்ற விரும்புகிறார்கள் என்பது புலனாகிறது. இங்கு எத்தனையோ எழுதுகிற செயற்படுகிற பெண்கள் நாடகங்களில் ஆர்வமுள்ள (நிச்சயமாய் நான் இல்லை) நிறையப் பெண்கள் இருக்கிறபோது, இத்தகைய பாணி திரையிசைநடனம் வகையறாக்களை முன்னிறுத்துவதில் அவர்கள் தமது வியாபார வெற்றியையே நோக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

இதில் ஒரு பிரச்சினையுமுமில்லை, ஆனால் முற்போக்கு 'முகம்' எதற்கு? ஒரே குப்பையைத்தான் கொட்டுகிறோம் என்பதையும் 'நல்ல நாடகங்கள் பார்க்க பா.அ.ஜயகரனிடமும் ஞானம் லம்பேட் இடமும் போங்கள்' என்று போன அரங்காடல் விமர்சனக் கூட்டத்தில் சொன்னதுபோலவே சொல்லிவிடவேண்டியதுதானே?

கடைசியாக 'வதை.' நல்ல தலைப்பு -குறியீட்டுரீதியாக பார்த்தால்- இந்த அரங்காடல் நிகழ்வே ஒரு வதை தானே. பாப்லோ நெருடாவின் கதை. பாப்லோ நெருடாவின் அதிகமான கவிதைகளை ஆங்கிலத்தில்தான் வாசித்திருக்கிறேன். அவருடைய படைப்புக்கள் அவரது பெண் தொடர்புகள் அவர் துரொகங்கள் பற்றி வாசித்திருந்ததால் அவருடைய மனிதநேயத்தைப் பற்றிக் கதைக்கையில் எங்கள் நாட்டில் இவரால் பலாத்காரப்படுத்தப்பட்ட ஒரு தலித் பெண்ணைப்பற்றி "காலச்சுவட்டில்" இரவிக்குமார் எழுதியது தான் ஞாபகம் வந்தது. எல்லா முக்கியமான ஆண்கவிகளுக்குப் பின்னும் இருக்கிற வாழ்கை தெரியாமல் இருந்தால் இதை இரசிக்கலாம். மற்றது அவரது இறுதிக்கால வாழ்வில் நடந்த சம்பவம் என்பதால் மற்றவைகளோடு ஒப்பிட்டுத் திருப்திப்படலாமே ஒழிய மிகவும் சிறந்தது என்று சொல்லமுடியவில்லை. அதுவும் பாப்லோநெருடா என்கிற கவிஞனிற்கு கொஞ்சமும் பொருந்தாது (அவரே ஒரு கவிஞர், அவருக்கேன் இன்னொரு கவிஞரின் இரவல் வார்த்தைகள்??) முடித்த பாரதியின் கவிதை. இங்கு அவரது கவிதைகளை -ஆங்கிலத்தில்- பெற்றக்கொள்வது கடினமா என்ன? அதற்குக்கூட உழைக்க முயலாத ஒருவரிடம் எதை எதிர்பார்ப்பது? எல்லாம் ஒரு அரைகுறைத் தன்மையாய் மட்டுமே இருந்தன. 12வது அரங்காடல் பழைய பத்தாம்பசலிக் கருத்துக்களையே தரும்' என அடுத்த அரங்காடல் பிளையரில் அறிவித்துவிட்டால் சிறப்பாயும் சாலப் பொருத்தமாயும் இருக்கும். எங்களுக்கு நேரமும் மிச்சம்.

(நன்றி - பதிவுகள்)

Wednesday, September 12, 2007

12வது அரங்காடல் தொடர்பான கட்டுரை

12வது அரங்காடல் நாடக நிகழ்வினைக் குறிக்கும் முகமாக இக்கட்டுரை வெளிவருகின்றது - வைகறை

பாப்லோ நெருடா என்ற மக்கள் கவிஞன்

(கே.எஸ். பாலச்சந்திரன்)

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞரென கருதப்படும் பப்லோ நெருடா வின் நூறாவது ஆண்டு நினைவு தினம் சென்ற ஆண்டு கொண்டாடப்பட்டபோது அவரது இறப்புக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்த சிலி நாட்டு அரசாங்கமும், இராணுவமும் கொண்டாட்ட ஒழுங்குகளில் முக்கிய பங்கு வகித்தன என்பது வியப்புக்குரியதுதான். சிலி நாட்டின் சகல தர மக்களினாலும் நேசிக்கப்பட்டதோடு, பப்லோ பிக்காசோ, சார்லி சாப்ளின் போல உலகம் பூராவும் அறியப்பட்டவராக பப்லோ நெருடா விளங்குகிறார்.

ஓரு புகையிரத பாதை செப்பனிடும் ஊழியரின் மகனாக 1904 ல் பிறந்த நெவ்ராலி றிக்காடோ றெயிஸ் பெசுவால்ரொ (இது தான் பப்லோ நெருடாவின் ஆரம்பப் பெயர்) இரண்டு மாத காலத்திற்கிடையில் தனது தாயைப் பறி கொடுத்தவர். இந்த சோகம் அவரது வாழ்நாள் பூராவும் அவரது பல கவிதைகளில் இழையோடியது.

பிறப்பு என்ற கவிதையிலே --
அதிரும் பூமியின் பரல் என்ற இடத்தைச் சார்ந்தவன் நான்
திராட்சைகள நிரம்பி வழியும் அந்நிலத்தில் இறந்த என் தாயிடமிருந்து உயிர் பெற்றவன்

என்று அந்த உணர்வைப் பங்கிட்டுக் கொள்ள முனைகிறார்.

தாயின் இறப்புக்குப் பின் தந்தையோடும் சிற்றன்னையோடும் சிலியின் எல்லைப்புற நகரமொன்றில் அவர் வாழநேர்ந்தது.
தனிமை நிரம்பிய சூழல், பசுமையான இயற்கை, விடாமல் பெய்யும் மழை என்பனவற்றோடு நெருடா அங்கே வாழ்ந்தார்.
உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் ஒரு மயானத்திலே எனது அப்பா அடக்கம் செய்யப்பட்டார் என்று சோகமாக ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தனது 13 வயதிலேயே கவிதைகள் எழுதத்தொடங்கிய அவர் அந்த வயதில் கவிதைகள் என்னைத் தேடி வந்தன என்று சொல்கிறார்.



கவிதை வந்தது என்னைத்தேடி
எங்கிருந்து ?
ஒரு நதியிலிருந்தா ?
அன்றி வாடைக்காலத்திலிருந்தா ?
எப்படியென்றும் எப்போதென்றும் கூட
எனக்குத் தெரியாது
(மொழிபெயர்ப்பு - வினோபா கார்த்திக்)

கவிதை எழுதுவது தன் தந்தைக்கு தெரியக் கூடாதென்பதற்காக செக்கோசிலோவாக்கிய கவிஞர் ஜான் நெருடாவின் பெயரை தனது புனைபெயராகச் சூட்டிக் கொண்டார். அதுவே அவரது சொந்தப்பெயராக காலகெதியில் வந்தது.

13 வயது சிறுவனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட அவ்வூரைச் சேர்ந்த பெண்கள் கல்லூரியின் தலைமை ஆசிரியை (இவரும் பகழ்பெற்ற ஒரு கவிஞர்) அவரது அபிமானியாக மாறி ஆதரவு கொடுத்தார். தனது 20வது வயதில் அவரது காதல் கவிதைகள் - 20 காதல் கவிதைகளும் ஒரு துன்பியல் கவிதையும் என்ற தலைப்பில் தொகுப்பாக வெளிவந்து அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து பிரபலமான இலக்கிய சஞ்சிகைகளில் அவரது கவிகைள் வெளிவந்தன.

சிலி நாட்டு இளைஞர் தங்கள் காதலிகளுக்கு எழுதும் கடிதங்களில் இளங்கவிஞன் பப்லோ நெருடாவின் கவிதை வரிகளை பயன்படுத்தினார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் கவிஞர்களை மற்ற நாடுகளுக்கு தூதுவர்களாளக அனுப்பும் ஒரு மரபு இருந்திருக்கிறது.. இந்த வகையிலேயே சிலிநாட்டின் தூதுவராக இந்த இளங்கவிஞனை அனுப்ப, சிலி அரசாங்கம் தீர்மானித்தபொழுது தூர கிழக்கு ஆசிய நாடுகளில்; ஒன்றை தேர்ந்து கொள்ளும் பொறுப்பு நெருடாவிடமே விடப்பட்டது. தன்னால் உலகப்படத்தில் எங்கு இருக்கிறதென்று கண்டுபிடிக்கமுடியாத பர்மாவை அவர் தேர்ந்தெடுத்தார்.

புதிய நாடு, புதிய மொழி, புதிய மக்கள் இந்த அனுபவங்களே நெருடா என்ற கவிஞனுக்கு பல கவிதைகளின் அடித்தளமாக இருந்திருக்கலாம். பர்மா, இந்தியா, இலங்கை மீண்டும் இந்தியா, ஜாவா, சிங்கப்பூர் இவ்வாறாக நெருடா ஆசியாவில் தனது தொடர்பை உருவாக்கிக் கொண்டார்.

இந்தியாவில் 1929ல் காங்கிரஸ் மகாநாட்டில் கூட கலந்து கொண்டிருக்கிறார். மகாத்மா காந்தி, நேரு முதலானோர்களோடு நட்பை வளர்த்துக் கொண்டார். காலனித்துவத்திற்கு எதிரான தனது எண்ணங்களை நெருடா இங்குதான் பெற்றார். பலகாலத்திற்கு பின்னர் இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு நெருடா வந்திருக்கிறார்.

தூதுவராக கடமையாற்றிய பின் ஒரு ஓய்வுக்காலத்தில் நெருடா நாடு திரும்பியபோது, சிலி பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தது சிலி நாட்டு நாணயம் பெறுமதியற்ற காகிதங்களாக விளங்கிய அந்த காலகட்டத்தில் வேலை கிடைப்பதே அரிதாகவிருந்தது. தொழிலாளர்கள் சோவியத் சார்பான அரசியல் அமைப்புக்களை அமைக்க போராடிக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில்தான் நெருடாவின் பூமியின் வதிவிடம் என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தூதுவராக பணியாற்றிய பொழுது, தன்னைப்போன்ற புகழ்பெற்ற இவக்கியவாதிகள், ஓவியர்கள் பிக்காசோ போன்றவர்களோடு நட்புறவு கொண்டிருந்தார். ஸ்பெயின் நாட்டில் பணியாற்றும் போது இவருக்கு நண்பரானவர் காசியா லோகா என்ற கவிஞர். அங்கு புரட்சி வெடித்தபோது அவர் கொல்லப்பட்டார். காசியா லோகாவின் மரணம் நெருடாவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.. நான் சில விளக்கங்கள் சொல்கிறேன் என்ற தலைப்பில் இவர் இறந்து போன தன் நண்பனுக்காக கவிதைகளை எழுதியிருக்கிறார்.

காதல் கவிதைகளை ஏராளமாக எழுதிய நெருடா தான் ஏன் அவற்றை பிறகு எழுதவில்லை என்று கூறும் கவிதை மிகச்சிறப்பானது. ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் அவரை மிகவும் பாதித்த விட்டது.

தெருவெங்கும் இரத்தம், தெருவெங்கும் இரத்தம், இளந்துளிர்களின் இரத்தத்தால் அன்றோ நிரம்பி வழிந்தது. என்று அவரது கவிதைகள் கூறத் தொடங்கின.

ஸ்பெயின் சம்பவங்களுக்குப் பிறகு அவர் சிந்தனைகள் தீவிரவாதப் போக்கடைந்தன. நாடு திரும்பிய நெருடா பின்தங்கிய மாவட்டம் ஒன்றின் பிரதிநிதியாக, செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆதரித்த விடெலா என்பவரே ஜனாதிபதியாக வந்தவுடன் பணக்காரர்களோடு கை கோர்த்துக்கொண்டு நேர்மாறாகச் செயல்படத்தொடங்கியதை நெருடாவினால் பொறுக்கமுடியவில்லை. விடேலாவின் அரசாங்கத்திறகு எதிரான அவரது பொறி பறக்கும் பேச்சுக்களை சிலிக்கு எதிராக கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்ற கவிதையிலே பிரதிபலிக்க காணலாம். இக்காலகட்டத்தில் அவர் பொதுவுடமைக்கட்சியில் சேர்ந்து கொண்டார். அரசாங்கத்தினால் தேடப்படும் அளவிற்கு நிலை மாறியது. கட்சியின நண்பர்களின் துணையோடு அவர் நாட்டை விட்டு ஆர்ஜென்ரினாவிற்கு மலைப்பாதைகளின் ஊடாக குதிரையில் தப்பிச் சென்றார். நெருடாவிறகு 1971ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தபோழுது பரிசை ஏற்றுக் கொண்டு, ஸ்வீடன் நாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவில், தான் தப்பியோடிய அனுபவத்தை ஒரு கவிஞனுக்கேயுரித்தான அழகுநடையில் சொல்லியதைக் ஒலிப்பதிவாக கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தத.

" Andes மலைத்தொடர் வழியே எங்கள் பயணம் நடந்தத. மாபெரும் காடுகள் நீண்ட குகைகளின் ஊடே நாங்கள் ரகசியமான பயணம் மேற்கொள்ளும் வகையில் எங்களைச்சூழ்ந்திருந்தது. யாரும் சென்ற அடிகளும் இல்லை. பாதையும் இல்லை. நாங்கள் நால்வரும் குதிரைகளில் மராமரங்கள், கடக்கமுடியாத ஆறுகள், நிமிர்ந்து நிற்கும் மலைச்சிகரங்கள், எல்லையற்ற பனிப்படலங்கள் இவை விதித்த தடைகளையும் மீறி என் சுதந்திரத்தை நோக்கி பயணமானோம்."

மக்களின் அபிமானத்தைப் பெற்ற நெருடா சிலிநாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போடடியிடும் நிலை வந்தபோது பொதுவான ஒரு அபேட்சகருக்காக விட்டுக் கொடுத்தார். அவர்தான் நெருடாவிற்கு மிக நெருங்கியவரான சல்வடோர் அலண்டே. அலண்டேயின் வெற்றிக்காக நெருடா முழுமூச்சுடன் வேலை செய்தார்.

உலகிலேNயு ஜனநாயக தேர்தல் ஒன்றில் கேரளாவில் நம்பூதிரிபாட் தலைமையில் பொதுவுடமைக்கட்சி ஆட்சிக்கு வந்ததென்றால் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக ஒரு இடதுசாரி ஆட்சிக்கு வந்தது அமெரிக்காவிற்கு பொறுக்கவில்லை. அலண்டேயின் அரசாங்கம் அடிமட்டத்தில் இருந்த சிலி மக்களுக்கு நன்மையான சட்டங்களை கொண்டு வந்தன. இடதுசாரி அரசாங்கத்தை செயலிழக்கச் செய்வதற்கு அமெரிக்கா தன்னாலான சகல முயற்சிகளையும் எடுத்தது. சிலி நாட்டில் இருந்த அமெரிக்க தூதுவரே நேரடியாக சவால் விட்டார். அமெரிக்கா சகல அழுத்தங்களையும் பிரயோகித்தது. உலகின் ஜனநாயக காவலன் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கா, ஜனநாயகரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக பொருளாதார தடைகளைக் கொண்டு வந்த விந்தைகள் அரங்கேறின. பொருளாதார தடைகள் மூலம் நாட்டில் சிக்கல்களை உருவாக்கி புரட்சி ஒன்றினை தோற்றுவிப்பதே அமெரிக்காவின் நோக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு சிலி நாட்டின்; இராணுவத்தின் ஒரு பகுதியினர் துணை போனார்கள்.

அலண்டேயின் ஜனாதிபதி மாளிகை சுற்றிவழைக்கப்பட்டு தாக்கப்பட்டது. தனது நண்பரான பிடல் காஸ்ட்ரொ அன்பளிப்பாகக் கொடுத்த துப்பாக்கியினாலேயே தன்னைச் சுட்டுக்கொண்டு அலண்டே தற்கொலை செய்து கொண்டார். தன் நண்பரின் இந்த முடிவு நெருடாவை மிகவும் பாதித்தது. அவரது நம்பிக்கைகளெல்லாம் சிதைந்து போயின. அவர் நேசித்த தொழிலாளர்கள் ஏராளமாகக் கொலையுண்டனர். விவசாயிகள் சுடப்பட்டனர். நாடெங்கிலும் சர்வாதிகார ஆட்சியின் படுகொலைகள் நிகழ்ந்தன.

மனம் உடைந்த போன நெருடா 1973 செப்ரெம்பர் 23ந்திகதி யன்று, அதாவது சல்வடோர் அலண்டே இறந்து 12 நாட்களில் இறந்து போனார்.. அவரது உடல் அவரது வசிப்பிடத்திலேயே பல நாட்களாக கிடந்தது. திருப்பி நகருக்குள் விடப்பட்ட ஆற்றினால் அவரது வீட்டின் கீழ்ப்பாகம் சேறும் சகதியுமாக இருந்தது. அப்படியிருந்தும் சர்வாதிகார ஆட்சிக்கோ, இராணுவத்துக்கோ பயந்து போகாமல் மக்கள் அங்கு வந்தார்கள். அவரது கவிதைகளை, அவரது இலட்சியங்களை, சித்தாந்தங்களை நேசிததவர்கள் அங்கு வந்தார்கள். அஞ்சலி செலுத்தினார்கள்.

நெருடா என்ற அந்த மாபெரும் கவிஞனின் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எந்தவிதமான பயமுமின்றி துணிவுடன் அவரது கவிதை வரிகளையும், அவர் நேசித்த பொதுவுடமைக் கோசங்களையும் சத்தமிட்டுச் சென்றார்களாம்

நெருடா தனது கவிதைகளில் பாடு பொருளாக எதையுமே விட்டு வைக்கவில்லை. முன்னமொரு பொழுதில் உப்பு பற்றிய சில்லையூர் செல்வராசன் அவர்களின் கவிதை என்னைப் பிரமிக்க வைத்திருக்கிறது. அந்தக் கவிதையின்; மொழிபெயர்ப்பு பென்குவின் வெளியீட்டகம் வெளியிட்ட ஆங்கிலத் தொகுப்பொன்றில்; இடம் பெற்றது. வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் நெருடாவின் கவிதைகளோடு பரிச்சியம் ஏற்பட்டபோது அவரும் உப்பு பற்றிக் கவிதை எழுதியிருக்கிறார் என்றறிந்து வியப்படைந்தேன். நெருடாவின் கவிதை புதியதோர் பரிமாணத்தில் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த உப்பை நான் முன்னம் ஒரு தடவை உப்பளத்தில் கண்டிருக்கிறேன்.
நம்ப மாட்டீர்கள்
அது பாடும்.
உப்புத்தான் பாடும்
உப்பளத்தில் பூமியின் அழுத்தத்தினால் முனகுவது போல பாடும்
அந்த மௌனப் பெருவெளியில் உப்பு பாடுவதைக்கேட்க என் உடலே நடுங்கும்.

நெருடா உப்பைப் பற்றி மாத்திரமல்ல. திராட்சை ரசம், தக்காளி, சோளம், மீன் இவற்றைப் பற்றியெல்லாம் பாடியிருக்கிறார்.

இந்த இடத்தில் நமது மகாகவியின் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது

இன்னதுதான் கவியெழுத
ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னதை நீர் சொல்லாதீர்
சோலை,கடல், மின்னல், முகில், தென்றலினை மறவுங்கள்
மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள்

நெருடாவின் இறப்பிற்குப்பின் ஒரு சுவையான சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் தான் இறந்தாலும் ஒரு கழுகாக வருவேன் என்று நண்பர்களுக்கு சொல்லியிருக்கிறார். அவர் இறந்து சில காலத்தின் பின் ஒரு நாள் அவரது Isla Negra என்ற வீட்டின் கதவுகள் பூட்டிக்கிடக்க, பிரம்மாண்டமான கழுகு ஒன்று நடு வீட்டில் வந்திருந்ததாம்.

நெருடா இருந்திருந்தால் இந்த சம்பவத்தையே கவிதையாக வடித்திருப்பாரோ ?

Tuesday, September 11, 2007

10வது அரங்காடல் தொடர்பான கட்டுரை

மொழிபெயர்த்தலும், தழுவலும் -ஈழநாடு

(கே.எஸ். பாலச்சந்திரன்)

வேற்று மொழிப்படைப்பை, அது நாவலாக, சிறுகதையாக, நாடகமாக எதுவாக இருந்தாலும், நாம் அதன் தாய் மொழியிலேயே படித்து, புரிந்து கொள்ள வல்லவர்களாக இருந்தாலும் சரி அல்லது ஆங்கிலத்தின் ஊடாக படிக்கும்போதும் சரி, ஏதோ ஒரு அழுத்தத்தை அல்லது பாதிப்பை அப்படைப்பு எம்மில் ஏற்படுத்தும்போது, அதை எமது மொழியின் ஊடாக எம்மவர்களோடு பங்கிட்டுக் கொள்ள விரும்புகிறோம். இவ்விருப்பமே மொழிபெயர்த்தல் செய்யவோ, தழுவல் செய்யவோ நம்மைத் தூண்டுகிறது.

எந்த இலக்கியப்படைப்பும் சொற்களின் கோர்வைதான் என்று இலகுவாகச் சொல்லிவிட்டாலும், அந்தச் சொற்களின் நேரடியான மொழிபெயர்ப்பு அந்த மூலப்படைப்பின் உயிரை அப்படியே கொண்டு வந்து விடாது. இது எந்த மொழிபெயர்ப்பாளனும் எதிர்நோக்கும் பிரச்சினைதான்.

மூலப்படைப்பை எழுதியவர் கூற விரும்பியதை நாம் இனம் கண்டு கொள்வது மிக முக்கியம். ஆனால் ஓரே படைப்பை மொழிபெயர்ப்பு செய்யும் இரண்டு எழுத்தாளர்கள் கூட இந்த இனம் காணும் வேலையில் வேறுபடலாம். இதையே சற்று நீடித்து சொல்வதானால் இப்படைப்பு இறுதியாகச் சென்றடையும் வாசகர்களோ, பார்வையாளர்களோ இன்னும் வேறுபட்ட அனுபவங்களைப் பெறலாம்.

~அச்சொட்டான| மொழிபெயர்த்தலை நேசிப்பவர்கள் ~மூலப்படைப்புக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது| என்று உடனே கூக்குரல் எழுப்புவார்கள். எவர் என்னதான் சொன்னாலும் ஒரு படைப்பு அதன் பூரணத்துவத்தை, அதன் நோக்கை, அதன் தேவையைக் கூட தனது தாய்மொழியிலேயே முழுமையாகப் பூர்த்தி செய்யும்.

மூலப்படைப்பின் பின்னணி, அதன் காலம், கூறப்பட்ட கதையில் வரும் பாத்திரங்களின் தன்மை, சார்ந்த சமூகத்தின் பண்பாடு;, விழுமியங்கள் எல்லாவற்றையும் ஒரு மொழிபெயர்ப்பாளன் முதலில் தான் புரிந்துகொள்வதென்பது ஒருபுறமிருக்க, மொழிபெயர்க்கப்படும் தனது மொழியிலே அவற்றை எவ்வாறு பெயர்த்துக் கொண்டு வரப்போகிறான் என்ற சிக்கல் நிச்சயமாக இருக்கும்.

இதனால் மொழிபெயர்த்தல் சாத்தியமற்றது என்றும் சற்று மேலே போய் அவசியமற்றது என்றும் யாராவது கூறுவார்களாயின், எமது மொழி மட்டும் தெரிந்த ஒருவனின் சிந்தனை விரிவாக்கமோ, பரந்துபட்ட அனுபவச்செழுமையோ மறுக்கப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இதனால்தான் காலம் காலமாக மொழிபெயர்த்தல் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. இல்லாவிடின் வால்மீகி இராமாயணத்தை நாம் அறிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். பக்கிம் சந்திரரின், சரத்சந்திரரின் வங்காள நாவல்களை, தாகூரின் கவிதைகளை நமது இளமைக்காலத்தில் வாசித்து பெற்ற அனுபவங்கள் சாத்தியமாகாமல் போயிருக்கும். ~மஞ்சரி| என்ற மாத இதழில் எப்போதோ வெளிவந்த ஏணஸ்ற் ஹேமிங்வேயின் ~கடலும் கிழவனும்| என்ற நாவலின் மொழிபெயர்ப்புதான் ஆங்கில இலக்கியத்தின் கதவுகளை எனக்கு திறந்து வைத்தது என்பது நடக்காமல் போயிருக்கும்.


எந்த இனமென்றாலும், எந்த மொழியைப் பேசுகின்றவர்கள் என்றாலும், எந்த நாட்டில் வாழ்கின்;றவர்கள் என்றாலும் மனித உணர்வுகள் ஒன்றானவை.
பாசம், நேசம், உறவு, தாபம் என்பவை வெளிக்காட்டும் அளவில் பேதமிருக்கலாமே தவிர எல்லாருக்கும் பொதுவானவை. எனவே எந்த மொழிப் படைப்பும் எமக்கு முற்றுமுழுதான அன்னியமானதாக ஆகிவிடாது.

வெறுமனே பாத்திரங்களின் பெயர்கள், நாடகத்தின் நிகழ்களங்களாக வரும் இடங்களின் பெயர்களை தமிழ்ப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கையில்லை. உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். 80களில் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டபோது, பாலேந்திராவின் ~கண்ணாடி வார்ப்புகளில் Laura, Amanda,Tom, Jim என்பவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் பார்வையாளர்களுக்கு சிரமம் இருக்கவில்லை.

காரணம் Amanda போன்ற தாய்மார்கள், முதிர்கன்னிகளாக திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் Laura போன்ற மகளையும், பொறுப்பற்றவனாகக் கருதும் Tom போன்ற மகனையும் வைத்துக்கொண்டு Jim போன்ற ஒரு மருமகனுக்காக அக்கால யாழ்ப்பாணத்தில் வழிமேல் விழி வைத்து காத்திருக்கத்தான் செய்தார்கள்.

(எங்கள் பிராந்திய மொழிவழக்கில் ~வெப்பிகாரம்| என்று ஒரு வார்த்தைப் பிரயோகம் இருக்கிறது. மிகப் பெரிய ஏமாற்றத்தை, சோகத்தை மனதில் புதைத்து வைத்துக்கொண்டு வெளியில் ஒப்புக்கு சமாளித்துக் கொள்வதை அது குறிக்கும். இந்தச் சொல்லின் முழு அர்த்தத்தை அன்றைய மேடையேற்றத்தில் Amanda வாக நடித்த நிர்மலாவின் நடிப்பில் புரிந்து கொண்டது இப்போது என் ஞாபகத்திற்கு வருகிறது )

பொதுமையான கருத்துக்களைக் கூறுவதை விட்டு சற்று தனிப்பட்டதாக இக்கட்டுரை திசை திரும்பும் அவசியம் இப்போது நேர்கிறது. மொழிபெயர்த்தல் என்பதைவிட தழுவல் செய்வதில் சில அனுகூலங்களை நான் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எனது மொழி பேசும் பார்வையாளர்களுக்கு பரிச்சியமான, அவர்கள் தங்களைத் தொடர்பு படுத்தக் கூடிய, ஏதோ ஒரு வகையில் பொறி தட்டக்கூடிய கருத்துக்களைக்கூறும் படைப்புகளையே நான் அனேகமாக தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

நான் தழுவல் செய்த தள்ளு வண்டிக்காரர்கள் நாடகம், அதன் அண்மைய மேடையேற்றத்தின்போது சில எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. Murray Schisgal என்பவர் எழுதி 1979ம் ஆண்டிலிருந்து கனடாவின் சஸ்கச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த மிக அண்மைய மேடையேற்றம் வரை பலதடவைகள் மேடையேறிய இந்த மேடை நாடகத்தை ~வாசிப்பதற்கு மட்டும்| உரித்தானதாக ஒரு விமர்சகர் கருதிய விந்தையும் அரங்கேறியது.

புலம் பெயர்ந்த எந்தச் சமூகத்திலும் நேற்று வந்தவன், இன்று வருபவனுக்கு புத்தி சொல்ல நினைப்பதும், சிலவேளைகளில் பிழையான வழிநடத்தலையே வழங்குவதும், சற்று மேலே போய் புதிதாக வந்தவனை ஏமாளியாக்க முனைவதும் நடக்கத்தான் செய்கின்றன. இந்த குணாதிசயங்கள் புலம் பெயர்ந்த எம்மவர்களுக்கும் பொருத்தமுடையதென்றதினால்தான் இந்த நாடகத்தை தெரிவு செய்தேன்.

சம்பவங்கள் என்று பார்த்தால் கூட வியாபாரப்போட்டிகளும், அதன் ~சுத்து மாத்துகளும்| நமக்கு அன்னியமானவையல்ல. பாத்திரங்கள் என்றால், வாழ்வின் உச்சங்களை தொட்டு விடக் கனவு காணும் மனிதர்களை நாம் எங்கள் சமூகத்திலும் சந்திக்கத்தான் செய்கின்றோம்.

~ஆங்கிலத்தில் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்| என்று புத்தி சொல்ல வருகிறீர்களா ? என்று ஒரு விமர்சகர் இந்த நாடகத்தின் ஒரு அம்சத்தை குறிப்பிட்டு ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

மூலப்பிரதியிலும் சரி, எனது தழுவலிலும் சரி - இப்படி நடக்கிறது என்றுதானே அங்கதமாகச் சொல்லப்பட்டது நடக்கவேண்டும் என்று சொல்லவேயில்லையே!. நமது பத்திரிகைளில் வரும் விளம்பரங்களில், வர்த்தகக் கைநூல்களில் உள்ள பெயர்களை ஒரு முறை கண்ணோட்டம் விட்டுப் பார்த்தால் போதும்.

~தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது| என்று நீண்டு போகும் சினிமா வசனம் இருக்கிறது. அதற்கு ஒப்பானதாக, தெரியாததை தெரிந்தது போலக் காட்டிக் கொள்வதும், புரிந்ததை புரியாததாகக் காட்டிக்கொள்வதும் எங்களுக்கு தெரியாததல்ல.

புரிவதும், புரியாமல் போவதும் அவரவர் இருப்பு நிலையை, மனநிலையைப் பொறுத்தது.
முதல் மேடையேற்றங்களின்போது பரிகசிக்கப்பட்ட ~Waiting for Godot” என்ற நாடகத்தின் சிறப்பை புரிந்து கொண்டு, காத்திருத்தலின் சோகத்தை நேரடி அனுபவமாக தெரிந்த சிறைக்கைதிகள் கண்ணீர் விட்டார்களாம்.

வாழ்க்கையில் என்றோ நடக்கும் என நம்பப்படும் எதற்காகவோ நாம் எல்லோரும் காத்திருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொண்டால், Waiting for Godotதமிழில் மேடையேற்றப்படுவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம்.

மொழிபெயர்ப்போ, தழுவலோ சம்பந்தப்பட்டவர்களின் கண்களின் ஊடாக, நமக்கு தெரியாத மனிதர்களை, அவர்கள் வாழ்வைத் தரிசிக்கிறோம். இந்தத் பார்வை மட்டுப்படுத்தப்பட்டது என நாம் அறியாமலில்லை. ஆனால் நமது தேடுகை தொடரப்படத்தான் வேண்டும்.

Monday, September 10, 2007

6வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள்

காலஞ்சென்ற சிறுகதை எழுத்தாளர் குமார் மூர்த்தி எழுதியது

பா.அ. ஜயகரன் ஒரு சிறந்த நாடகப்பிரதியாக்கக்காரன் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார்.

சமூகத்தில் ஒரு வீதம் அல்லது இருவீதம் இருக்கும் மக்களின் பிரச்சனைதான் பேசப்பட்டது என்றாலும் அதை ஒரு தாக்கமான வலுவான முறையில் பார்வையாளர்முன் வெற்றிகரமான
முறையில் வைத்ததில் ஜயகரனின் ஆளுமை நன்கு புலனாகின்றது. ஆனால் இந்திரா பார்த்த சாரதியின் மழை நாடகத்தை நினைவுபடுத்துகிறதை தவிர்க்க முடியாவிட்டாலும் இணைத்துப் பேச முடியாதபடி வேறுபட்டதாகவே இருக்கின்றது.

பங்களா, கார், நிலபுலன்கள், நாய், வேலையாட்கள், என்று தடல்புடலாக செல்வாக்குடன் வாழ்ந்த செல்லையா வாத்தியார் குடும்பம் இன்று கனடாவில், பெருமை பேசல் ஒன்றைத்தவிர மிகுதி எல்லாம் இழந்துவிட்ட நிலை. நோயாளியாக படுத்தபடுக்கையில் செல்லையாவாத்தியார். முதிர் கன்னியாக அவர் மகள், தகப்பனின் பெருமைகளைக் கட்டிக்காப்பதில் அதீத ஈடுபாடு அதனால் வாழ்க்கை முழுவதும கன்னியாக இருக்க வேண்டியநிலை. இந்த வங்குரோத்து தனத்தையும் பெருமைகளையும் வெறுக்கும் இளையமகன். அவன் ரொறன்றோவில் கோப்பை கழுவும் வேலை.

கதை சுருக்கமான கதைதான். ஆனால் கூர்மையான வசனங்கள் பார்வையாளர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வசனங்கள் அதைவிட பழகிப்போன வசனங்கள் எனவே பார்வையாளன் மிக இலகுவாக நாடகத்துடன் ஒன்றக்கூடியதாக இருந்தது. ஆனால் கடைசிக் காட்சியில் இளையமகன், குடும்பத்தின் பிற்போக்குத் தனங்களை வெறுப்பவனாக எதிர்ப்பவனாக காட்டப்படுகிறது. அவனுக்கு அந்த விழிப்புணர்வு எங்கிருந்து வந்தது என்பது காட்டப்படவில்லை.

இது ஒரு சினிமாப்பாணி முடிவை ஒத்ததாக கதாநாயகன் பத்துபேரை ஒரே நொடியில் அடித்து சாய்த்துவிட்டு, கதாநாயகியின் கைச்சிராய்ப்புக்கு கட்டுப்போடுவது போன்ற கதையாக எடுத்துக் கொள்ளவதா?

கிண்டலா செய்கிறீர்கள் தற்கால இளைஞர்களுக்கு முற்போக்கு எண்ணங்கள் கூடப்பிறந்தது. அதை விளக்கவேண்டிய அவசியமேயில்லை என்பாரேயானால் , இங்குள்ள முக்காலே மூணுவீதம்பேர் கிலோ என்னவிலை என்று கேட்கும் நிலையில்தான் இருக்கிறார்கள் என்ற பதில்தான் வரும்.

பண்பட்ட நடிகரான கே.எஸ். பாலச்சந்திரன் செல்லையா வாத்தியராக நடித்திருந்தார். மொத்தமாக பத்து சொல்லுக்கூட பேசியிருக்கமாட்டார். சாய்மனைக் கதிரையில் படுத்தபடியே நாற்பது நிமிடமும் பார்வையாளர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார். பிள்ளை கேற்றை பூட்டிவை ஆரும் உள்ள வந்திருவினம் இதைதான் திரும்ப திரும்ப சொல்லுகிறார். ஒவ்வொருமுறை சொல்லும் போதும் இன்னொரு முறை சொல்லுவாரா? என்ற எதிர்பார்ப்பு அவர் போத்தியிருந்த போர்வைகூட நடித்தது எனலாம்.

மகளாக நடித்த சுமதிரூபனின் நடிப்பு மிக யதார்த்தமாக திறம்பட நடித்திருந்தார். இதுதான் அவருடைய முதல் மேடையேற்றம் என நினைக்கிறேன். முகபாவம் வசன ஏற்ற இறக்கம் பாவனைகள், போன்றவற்றில் எந்தப் பிசிறும் இல்லாமல் தேர்ந்த நடிகைபோல் நடித்
திருந்தார். ஆல்பத்தைப் பார்ப்பதும் அந்த நினைவுகளில் மூழ்கிப்போவதும் தந்தைமேல் காட்டும் அக்கறையும், கோபம் வரும்போது சீறுவதும் பின் தணிந்துபோவதும் மிக இயல்பாக பாத்திரத்துடன் ஒன்றி செய்திருந்தார். அலங்கார ஒப்பனைவுகள் எதுவுமின்றி சோகத்தை
முகத்தில் அப்பிக் கொண்டு மற்றைய இரண்டு சிறந்த நடிகர்களுக்கு இணையாக ஈடுகொடுத்து நடித்திருந்தது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.

அடுத்து பாராட்டைப் பெறுபவர் திலீப்குமார். இதிலும் ஒருவரே இரண்டு பாத்திரங்களைச் செய்வதான ஒரு உத்தியை நெறியாளர் கையாண்டிருந்தார். மிகவும் வரவேற்க வேண்டிய விடயம் அதுவும் அந்தப் பாத்திரத்திற்கு திலீப்குமாரைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார்.
பொதுவாக திலீப்குமார் மேடையி;ல் தோன்றினால் பார்வையாளர்களுக்கு ஒரு கலகலப்பும் உற்சாகமும் தொற்றிக் கொள்ளும் எல்லா நிகழ்வுகளிலும் தொடர்ந்து தனது நடிப்பாற்றலால் ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருப்பவர். 'எல்லாப்பக்கமும் வாசல்’ நாடகத்தில் அவரின் நடிப்புப் பலருக்கு இன்னும் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றது. இதிலும் அவருடைய துள்ளலும் எள்ளலும் சோகமாக தொய்வைத் தரக்கூடிய இடத்தில் எல்லாம் தூக்கி நிறுத்தி நாடகத்தை சுறுசுறுப்பாக்கி விடுகின்றது. இளைய மகனாக வரும் செந்திலும் சுமாராக நடித்திருந்தார். இளைஞருக்குரிய படபடப்பும் கோபமும் எடுத்தெறிந்து பேசும் சுபாவமும் எரிச்சலும் வெளிக்காட்டி நடித்திருந்தாலும் ஏனோதெரியவில்லை ஒரு செயற்கைத்தனம் வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தது. இனிவரும் மேடையேற்றத்தில் நெறியாளர் இதில் கவனமெடுத்தால் நன்று.

(நன்றி - AnyIndian.com)