Thursday, September 13, 2007

12வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள்

12வது அரங்காடல் - -தான்யா

நான் 98 இல் பார்த்த அரங்காடலைப்பற்றிய மனப்பதிவு மிகவும் அற்புதமாய் இருந்தது. இன்றும் அந்த உணர்வு தந்த பாதிப்பிலேயே அரங்காடல் பார்த்து வருகிறேன். நல்ல நாடகங்கள் நல்ல நடிப்பு எல்லாவற்றிலும் ஒரு முழுமையை பேணிய காலம் அது. இன்று மிகவும் மலிவான இரசனையை மக்களிடம் புகுத்தி பணம் பண்ணும் முயற்சியாகவே அரங்காடல் இருக்கிறது. நிறைய நடிகர்கள், பற்றாக்குறையின்றி நடிக்கும் நல்ல நடிகைகள் என்று முன்னோக்கி வந்த போதும். நல்ல தரமான நாடகப் பிரதியாளர்கள் இன்றி 'வெறும்' நாடகங்களாய் மட்டுமே ஆகி விட்டது.

1999 ஆம் ஆண்டில் 10க்கு மேற்பட்ட நடிகர் நடிகைகளைக் கொண்டு மேடையேற்றிய குழந்தை சண்முகலிங்கத்தின் 'அன்னையிட்ட தீ' அப்போதைய அமைதியற்ற சூழலில், போரால் ஏற்பட்ட உளவியல் பிரச்சனைகளை எடுத்து வந்து 'அன்னை இட்ட தீ', பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக ஆட்கொண்டது. வழமையான பழமைவாத கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அது மீள்பிரதியாக்கம் செய்யப்பட்டபோது தனித்துவமாய் இருந்தது.

2005 இல் அரங்காடல் தன் பேரை மட்டுமே தன்னகத்தில் வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மறுபடியும் குழந்தை சண்முகலிங்கத்தின் 'நரகோடு சுவர்க்கம்" என்ற நாடகம் மேடையேறியிருக்கிறது. அதை நான் பிரதியாய் வாசித்ததில்லை ஆதலால் நாடகத்தில் என்ன மாற்றம் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லமுடியவில்லை. ஆனால் இன்றைய காலத்திற்குப் பொருந்தாமல் இடப்பெயர்வு செல் அடி போன்றவையை மேடையில் பார்த்தபோது, பார்வையாளர்களிடத்தில் சலிப்பைத்தான் காணமுடிந்தது. 'இந்த நேரத்தில் எதற்கிந்த நாடகம்' என்ற எரிச்சலைத் தவிர வேறெந்த உணர்வும் வரவில்லை. நாடகத்தில் இடம்பெயர்ந்துபோனவர்கள், திரும்பி வந்து தங்கள் வீட்டை வர்ணிக்கையில், 'எங்கட வீடு கற்பழிக்கப்பட்டிருந்தது' என்கையில் வீட்டைப் பெண்ணாக ஒப்பிட்டிருப்பார்கள். இந்த பழைய கற்புசார் மதீப்பீடுகள் கொண்ட இந்த வசனத்தை மீள்பிரதியாக்கம் செய்தவர் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில், 'அரங்காடல்' போன்ற முற்போக்கின் பிரதிநிதிகளிடம், 'இவற்றை விமர்சிக்க வேண்டியிருக்கிறதே' என்பது அயர்ச்சி தருகிறது.

முன்பெல்லாம் அரங்காடலைச் சேர்ந்தவர்கள் இந்த பள்ளிக்கூட ஒன்றுகூடல்கள் மற்றும் வானவில் திரையிசை நடனங்களை நக்கலடிப்பார்கள். குறிப்பாக ஊரைப்பற்றி எடுக்கும் நாடகங்களை அவர்கள் மிகவும் மோசமாக விமர்சிப்பார்கள். இன்று அவர்களே அந்த இடத்தில்தான் வந்து நிக்கிறார்கள்! சென்ற அரங்காடல்களைப் பற்றியும் இதே மாதிரியான மனப்பதிவே மிஞ்சுகிறது. இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின்பு வந்த அரங்காடல்கள் தம் கலைத்தன்மையை முற்றாக இழந்து விட்டன. இனி என்கிற நம்பிக்கையும் போய்விட்டது. வெறும் கேளிக்கையாகவும், அரங்காடல் என்பது ஒரு உயர்வர்க்கத்தினர் விழாவாகவும் ஆகிவிட்டது.

இரண்டாவதாக அரங்கேற்றப்பட்டது சகாப்தனின் 'அரியது கேட்பின்...' ஒரு வித்தியாசமான முயற்சி என்று சொல்லலாம். விஞ்ஞானத்தால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது என்ற கருத்தை வைத்து எடுத்திருந்தார்கள். 'பார்த்தவற்றுள்' இது பரவாயில்லை. வித்தியாசமான முயற்சி நல்ல நடிப்பு.

'மறுமுகம்' என்ற நாட்டிய நாடகத்தைப் பற்றிச் சொல்லுவதற்கு முன்னம் இன்டிகோ (Indigo) என்கிற -1999ம் ஆண்டு அரங்காடல் அரங்கில்- சுதர்சன் அவர்கள் போட்ட நாடகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். சுதர்சன் இன்டிகோவில் பெண்ணுக்கும் இயற்கைக்குமான தொடர்பை நவீன முறையில் யோகா அடிப்படையில் நடனம்
அமைத்திருந்தார். மேடையில் பருத்த கறுப்புப் பெண். பெரிய இடைகளைக் கொண்ட அந்தப் பெண்ணின் உருவமோ வழமையான அழகுசார் மதிப்பீடுகள் அற்று நடனமாய் மட்டுமே இருந்தது. பூவிரிவது போல அவள் கால்களை விரிப்பாள் அந்தப் பெண், பிறப்பை சொல்வதென்று நினைக்கிறேன். அவர் அதை பரதநாட்டிய அடிப்படை முறையிலேயே எடுத்திருப்பார். அப்போ சுதர்சன் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானார். குறிப்பாக அந்த கறுத்தப் பெண் மற்றும் அவள் உடல் அசைவுகளே கலாச்சாரவாதிகளாலும் பெண்களாலும் விமர்சிக்கப்பட்டது. சுதர்சனிடம் 'ஏன் தமிழ் பெண்ணை நடிக்க வைக்கவில்லை' என்று கேட்ட போது அவர்கள்யாரும் நடிக்க மாட்டார்களே என்று சொன்னார். ஆமாம் தமிழ் பெண்கள் யாரும் கால்களை விரிக்க மாட்டார்கள்தான். இந்த நேரம் மாலினி பரராஜசிங்கம் அவர்களையும் நினைவு கூற வேண்டியிருக்கிறது. தான் கற்ற பரதநாட்டியத்தை அதே பழைய ஆடம்பரமான தன்மையிலிருந்து மாற்றி "தனிமரம்" போன்ற வித்தியாசமான முயற்சிகளும் செய்திருக்கிறார்கள்.இந்த பின்னணிகள் பற்றிய அறிமுகம் "மறுமுகம்" நாட்டிய நாடகத்திற்கு தேவையாய் இருக்கிறது. ஏனெனில் இதில் நடித்த எவருக்கும் இந்தத் தகவல்கள் தொ¢யாது. அவர்கள் மேடையில் நிகழ்த்தியது ஒரு திரையிசை நடனத்திற்கு ஒப்பானது. அன்று சுதர்சனை விமர்சித்த கலாச்சார காவலர்கள் இதை விமர்சிக்கப் போவதில்லை ஏனெனில் மேடையில் இந்த நடனத்தை நிகழ்த்தியவர்கள் நாங்கள் எல்லோரும் பார்க்க விரும்புகிற இளைய தலைமுறைப் பெண்கள். சினிமாவிலோ நாடகங்களிலோ பாத்திராத யதார்த்தமான ஒரு பெண்ணை சுதர்சனால் படைக்க முடிந்தது. அவர் அதை ஒரு புதிய முயற்சியாய் எடுத்துக் கொண்டார். அது பலருக்கு உறுத்தியது. ஏனெனில் அந்தக் கறுத்தப் பெண்ணின் உடல் இந்த 'முற்போக்கு' ரசனைக்கு உரியவர்களும் பார்க்க விரும்புகிற ஒன்று அல்ல. ஆனால் இந்த திரையிசை நடனத்திற்கு பலரது அபிப்பிராயம் 'இளம் பிள்ளைகள் ஆடினார்கள் பார்க்கலாம்தானே!'.

அம்பை ஒருமுறை அவரது பேட்டியில் சொல்லியிருந்தார் தங்கட வீட்டில் ஒரு நாய் வளர்த்தார்களாம் அந்த நாயை அவர்களுடைய அம்மா சமையல் அறைக்குள் விடுவதில்லை ஆனால் அந்த நாய் என்ன செய்யுமென்றால் அது முக்காவாசி
உடம்பை கிச்சினுக்குள்ள வைச்சுக்கொண்டு ரெண்டு கால மட்டும் வெளிய வைச்சிருக்குமாம், வெளியேதான் இருக்கிறேன் என்கிற மாதிரி... அப்படித்தான் இந்த நடனம் பார்க்கும் போது எனக்குத் தோணியது. அதாவது அவர்கள் ஆடியது ஒரு திரையிசை நடனம் (நீங்க உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு துள்ளல் பாட்டைப் போடலாம்) ஆனால் குழந்தை துஸ்பிரயோகம் எயிட்ஸ் போன்ற விசயங்களை எடுத்து அவர்கள் தாங்கள் போட்டது ஒரு புதுமையான நாடகம் என்ற உணர்வை உண்டு பண்ண முயன்றார்கள். (அரங்காடலின் தற்போதைய நிலைப்பாடும் இதுவே.

நாங்கள் முற்போக்காளர்கள், எங்கள் முற்போக்கு கீழே விழாதபடி நாடகங்களும் 'பாவனையோடு' இருந்தால் போதுமானது.) ஆனால் இவர்கள் கெட்டிக்காரர்கள் சுதர்சனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவர்களிடம் கேட்கப்படமாட்டாது ஏனெனின் வித்தியாசமாய் மரபை மீறி இவர்கள் எதையும் செய்யவில்லை, செய்யப்போவதுமில்லை.

1999 களிற்குப்பின் சுதர்சனை அரங்காடலும் மறந்து போனது. அரங்காடலுக்காக தர்சினி இயக்கிய(?) இரண்டாவது நடனம் இது. இதிலிருந்து பெண்கள் குறித்தும் இன்ன பிற விடயங்கள் குறித்தும் எதை இவர்கள் மேடையேற்ற விரும்புகிறார்கள் என்பது புலனாகிறது. இங்கு எத்தனையோ எழுதுகிற செயற்படுகிற பெண்கள் நாடகங்களில் ஆர்வமுள்ள (நிச்சயமாய் நான் இல்லை) நிறையப் பெண்கள் இருக்கிறபோது, இத்தகைய பாணி திரையிசைநடனம் வகையறாக்களை முன்னிறுத்துவதில் அவர்கள் தமது வியாபார வெற்றியையே நோக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

இதில் ஒரு பிரச்சினையுமுமில்லை, ஆனால் முற்போக்கு 'முகம்' எதற்கு? ஒரே குப்பையைத்தான் கொட்டுகிறோம் என்பதையும் 'நல்ல நாடகங்கள் பார்க்க பா.அ.ஜயகரனிடமும் ஞானம் லம்பேட் இடமும் போங்கள்' என்று போன அரங்காடல் விமர்சனக் கூட்டத்தில் சொன்னதுபோலவே சொல்லிவிடவேண்டியதுதானே?

கடைசியாக 'வதை.' நல்ல தலைப்பு -குறியீட்டுரீதியாக பார்த்தால்- இந்த அரங்காடல் நிகழ்வே ஒரு வதை தானே. பாப்லோ நெருடாவின் கதை. பாப்லோ நெருடாவின் அதிகமான கவிதைகளை ஆங்கிலத்தில்தான் வாசித்திருக்கிறேன். அவருடைய படைப்புக்கள் அவரது பெண் தொடர்புகள் அவர் துரொகங்கள் பற்றி வாசித்திருந்ததால் அவருடைய மனிதநேயத்தைப் பற்றிக் கதைக்கையில் எங்கள் நாட்டில் இவரால் பலாத்காரப்படுத்தப்பட்ட ஒரு தலித் பெண்ணைப்பற்றி "காலச்சுவட்டில்" இரவிக்குமார் எழுதியது தான் ஞாபகம் வந்தது. எல்லா முக்கியமான ஆண்கவிகளுக்குப் பின்னும் இருக்கிற வாழ்கை தெரியாமல் இருந்தால் இதை இரசிக்கலாம். மற்றது அவரது இறுதிக்கால வாழ்வில் நடந்த சம்பவம் என்பதால் மற்றவைகளோடு ஒப்பிட்டுத் திருப்திப்படலாமே ஒழிய மிகவும் சிறந்தது என்று சொல்லமுடியவில்லை. அதுவும் பாப்லோநெருடா என்கிற கவிஞனிற்கு கொஞ்சமும் பொருந்தாது (அவரே ஒரு கவிஞர், அவருக்கேன் இன்னொரு கவிஞரின் இரவல் வார்த்தைகள்??) முடித்த பாரதியின் கவிதை. இங்கு அவரது கவிதைகளை -ஆங்கிலத்தில்- பெற்றக்கொள்வது கடினமா என்ன? அதற்குக்கூட உழைக்க முயலாத ஒருவரிடம் எதை எதிர்பார்ப்பது? எல்லாம் ஒரு அரைகுறைத் தன்மையாய் மட்டுமே இருந்தன. 12வது அரங்காடல் பழைய பத்தாம்பசலிக் கருத்துக்களையே தரும்' என அடுத்த அரங்காடல் பிளையரில் அறிவித்துவிட்டால் சிறப்பாயும் சாலப் பொருத்தமாயும் இருக்கும். எங்களுக்கு நேரமும் மிச்சம்.

(நன்றி - பதிவுகள்)

No comments: